மழைக்காலம் வருகிறது நனைய தயாராகுங்கள் பேருந்து நிழற்குடை இல்லாமல் சென்னை மக்கள் அவதி
8/24/2015 2:24:05 PM
சென்னையை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத்தான் பிரமாண்ட நகரம். அழகான நகரம். ஆனால் இங்கு வசிப்பவர்களுக்கோ... அதை வெளியில் சொல்ல முடியாது. மெட்ரோ பணிக்காக சாலையை தோண்டுகிறோம் என்று கூறி கடந்த பல ஆண்டுகளாக அண்ணாசாலையை தோண்டி, தோண்டி ஒரு மலைப்பாதை போல மாறிவிட்டது. மேடும் பள்ளங்களும், ஒற்றையடி பாதையும், வளைவும் என மேலை நாடுகளில் நடைபெறும் ஹர்டில் ரேஸ் என்று சொல்லக் கூடிய அளவுக்கு உள்ளது. இது இவ்வாறு இருக்க நகரம் முழுவதும் தற்போது பொதுமக்கள் தேவைக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சுமார் 783 வழித்தடங்களில் சுமார் 3652 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் ஒரு நாளில் பயணம் செய்வோர் எண்ணிக்கை மட்டும் சுமார் 12 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலாகும் வருவாயின் அளவும் நாள் ஒன்றிற்கு ரூ.2.85 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மாநகர பஸ்கள் இயக்கும் வழித்தடங்களில் 1,400-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்களில் மட்டுமே பெயரளவுக்கு நிழற்குடைகள் இருக்கின்றன. இதில், அமைக்கப்பட்டிருந்த விளம்பரங்கள் மூலம் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானமும் கிடைத்தது. இதனால், பஸ் நிறுத்தங்களில் யார் நிழற்குடை அமைப்பது என்பது குறித்து சென்னை மாநகராட்சிக்கும், மாநகர போக்குவரத்து கழகத்துக்கும் போட்டி நடந்தது. இதனால் கோர்ட்டில் வழக்கு தொடுக்கும் வரை நிலைமை சென்றது. இறுதியில், மாநகர போக்குவரத்துக் கழகம் 500 இடங்களிலும், எஞ்சியுள்ள மற்ற இடங்களில் மாநகராட்சியும் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இப்போது எதற்கு இந்த கணக்கு வழக்கு என்கிறீர்களா? இதுவும் இப்படியே இருக்கட்டும். அதே போல் சென்னை மாவட்டத்திற்கு உள்பட்ட பகுதியில் மட்டும் 16 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. ஐந்து ஆண்டிற்கு தமிழக அரசு சார்பில் ஒரு தொகுதிக்கு ரூ.9.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆக சென்னைக்கு மட்டும் மொத்தமாக ரூ.156 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எம்பிக்களின் தொகுதிகள் வேறு உள்ளன, அவற்றிற்காக மத்திய அரசு ஒதுக்கிய கோடிகள் உள்ளன. அது தனிக்கதை.
கடந்த ஆண்டுகளில் சென்னையில் நடைபெற்ற பணிகளை கணக்கெடுத்தால் 444 பணிகள் திட்டமிடப்பட்டு 209 பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. திட்டங்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் அதற்காக செலவிடப்பட்ட தொகையோ வெறும் ரூ.15.5 கோடி.இப்போது பிரச்னைக்கு வருவோம். இத்தனை கோடி எம்பி நிதி, எம்எல்ஏக்கள் நிதி, போக்குவரத்து கழகத்தின் மூலமாக மக்கள் அளிக்கும் வருவாய் பணம், விளம்பரம் மூலம் கிடைக்கும் வருவாய் பணம் இத்தனை இருந்தும் வெயிலுக்கோ மழைக்கோ ஒதுங்க ஒரு நிழற்குடை மக்களுக்கு உள்ளதா என்று கேட்டால் அது கேள்விக்குறிதான். நகரின் முக்கியமான இடங்களில் கூட நிழற்குடை கிடையாது என்பது மிகவும் வெட்ககேடான அவலம். இதை நாம் சொல்லவில்லை. அண்மையில் நாளேடுகளிலும், செய்தி தாட்களிலும் மக்கள் அடுக்கடுக்காக தெரிவித்த கோரிக்கைகளில் இருந்தே இதை நாம் தெரிந்து கொள்ளலாம். ஒருபுறம் நிதி உறங்குகிறது. மறுபுறம் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக கூறி மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் மக்கள்தான் வெயிலிலும், மழையிலும் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர்.
வியாசர் பாடி, சத்திய மூர்த்தி நகர் ஆகியவை மக்கள் அடர்த்தி மிக்க பகுதிகள். இங்கிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், மாணவர்கள், வியாபாரிகள் என பலதரப்பினரும் மாநகராட்சி பேருந்துகளில் சென்று வருகின்றனர். ஆனால் பேருந்துக்காக காத்திருக்கையில் மழைக்கோ, வெயிலுக்கோ ஒதுங்கக் கூட நிழற்குடை கிடையாது. நோயாளிகள், வயதானவர்கள் நின்றால் அவர்கள் கதி அதோ கதிதான்.அதே போல் மற்றொரு முக்கியமான பகுதியான கிண்டி ரயில் நிலையம். இங்கு உள்ளுர், மற்றும் வெளியூர் மக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். தாம்பரம் மார்க்கத்தில் மிகவும் முக்கியமான நிலையம் கிண்டி. ஆனால் இங்குள்ள ரேஸ்கோர்ஸ் நிறுத்தத்தில் நிழற்குடை கிடையாது. அன்றாடம் மக்கள் வெயில், மழை, புழுதி என அவதிப்பட்டுக் கொண்டு தெருவில் ஒரு பிச்சைக்காரர்களை போல நிற்க வேண்டிய நிலை உள்ளது.
மாறாக ஆட்களே அதிகம் வராத பல்வேறு இடங்களிலும் நீண்ட ரயில் போல நிழற்குடைகளை கட்டி மாநகராட்சி நிதியை வீணடித்து வருகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த இரண்டு இடங்கள் மட்டுமல்ல, நகரில் பல்வேறு முக்கியமான இடங்களான அண்ணாசாலை, மயிலாப்பூர் கச்சேரி ரோடு, தேனாம்பேட்டை டிஎம்எஸ் எதிர்புறம், எஸ்ஐஇடி அண்ணாசாலை சிக்னல் என அடுக்கிக் கொண்டே போகலாம். நிழற்குடைக்காக அதிகாரிகள் மரங்களை வெட்டி சுருட்டினார்கள். பின்னர் மெட்ரோ வேலை, மாற்று பணி, நவீனப்படுத்துதல், சாலை அகலப்படுத்துதல் என்று கூறி நிழற்குடைகளை இடித்தார்கள். அவ்வளவுதான். இடித்தது இடித்ததுதான். அதன் பிறகு நிழற்குடை என்பது பகல் கனவுதான்.
கோரிக்கை, போராட்டம், மனு என்று எத்தனை வந்தாலும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அதுவெல்லாம் பெரிய மேட்டரே கிடையாது. ஆனால் நிழற்குடை இல்லாத இடங்களில் கூட டாஸ்மாக் கடை உள்ளது. அதில்தான் இவர்களுக்கு கவனம். அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னோம். சென்னை நகரம் வெளியில் இருந்து பார்க்கத்தான் பெரிய நகரம். ஆனால் உண்மையில் சென்னை வாசிகளுக்கு கொடிய நரகம்தான். சாலையில் உடைப்பெடுத்துக் கொண்டு ஓடும் பாதாள சாக்கடைகள், ஒழுங்காக நிறுத்தத்தில் நின்று செல்லாத பேருந்துகள், வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்க கூட நிழற்குடை இல்லாத அவலங்கள் என்று சென்னையின் சாதனை பட்டியல் மிகவும் நீளமானது. ஆனால் அதை விட கனமானது சென்னை மக்களின் வேதனை. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இந்த மாத தொடக்கத்தில்தான் நிழற்குடைகளை கட்டப் போவதாகவும், டெண்டர் வந்துள்ளதாகவும் மாநகராட்சி அறிவித்தது. ஆனால் உண்மை நிலையை பார்த்தால் இவர்கள் எப்போது கட்டி முடிக்க? மக்கள் எப்போது அதில் இளைப்பாற என்ற விரக்திதான் எஞ்சுகிறது. ஆகையால் சென்னை மக்களே உங்களை பிடித்துள்ள சாபக்கேடு ஆட்டி படைக்கிறது. எனவே மழைக்காலம் வருகிறது கொட்ட கொட்ட நனைய தயாராகுங்கள் சென்னை மக்களே. வேறு வழி?