பெண் அதிகாரி அவமதிப்பால் விவசாயி தற்கொலை: போலீசார் வழக்கு பதிவு
8/22/2015 11:59:19 AM
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள விதர்பா பகுதியில்தான் இந்தியாவிலேயே அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் இடமாக உள்ளது. கடன் தொல்லை, பாசனம் பொய்த்து போதல், அதிகாரிகள் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இங்கு விவசாயிகள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இந்த சூழலில் நந்து தர்பார் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.இதே பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரி சரிகா பாரி என்பவர் பயிர்கள் சேதமடைந்தது தொடர்பாக அப்பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது அவர் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயி லட்சுமண் பார்தே (வயது 70) என்பவரை அவமதித்து பேசியதாக தெரிகிறது. இதையடுத்து லட்சுமண் பார்தே சரிகா பாரி மீது புகார் தெரிவித்து மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இந்த சூழலில் இது நடந்த சில தினங்களில் லட்சுமண் பார்தே தற்கொலை செய்து கொண்டார். அதிகாரி அவமதிப்பு காரணமாகவே லட்சுமண் தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தற்போது விவசாயி லட்சுமணனின் மகன் தீபக் பார்தே (வயது 34) கொடுத்த புகாரின் பேரில் அதிகாரி சரிகா பாரி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.