இளங்கோவன் நிதானத்துடன் பேசுகிறாரா? இல.கணேசன் சந்தேகம்
8/22/2015 11:52:39 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறியதாவது:மகாமக திருவிழா கும்பகோணத்தில் நடைபெற சரியாக 6மாதம் உள்ளது. பலலட்சம் மக்கள் இந்த மகாமக திருவிழாவிற்கு வருகை தந்து புனித நீராட உள்ளார்கள். வட இந்தியாவில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெறுகிறது .அதே போல் மகாமக குளத்தில் தென்னக கும்பமேளா நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு திருவேணி சங்கமத்தில் நடந்த கும்பமேளா எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்துள்ளது. அதே போன்று இங்கு நடைபெற உள்ள மகாமக திருவிழாவும் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்வேன். அரசு இவ்விழாவை சிறப்பாக நடத்திட தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.
வரும் பக்தர்களுக்கு சுத்தம், சுகாதாரம் குறைபாடு இல்லாமல் இருக்கவேண்டும். சாலைவசதிகள் நன்கு இருக்கவேண்டும். இந்தவிழா தேசிய திருவிழாவாகும். இந்த விழாவை சிறப்பாக நடத்த மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தவறாக பேசிவிட்டேன் என கூறி இருந்தால் இந்த அளவிற்கு போராட்டங்கள் நடைபெற்றிருக்காது. மீண்டும் மீண்டும் அவரது பேச்சால்தான் போராட்டங்கள் நடைபெற்றது. அவர் நிதானத்தில்தான் பேசுகிறாரா என சந்தேகமாக உள்ளது. அவர் போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும். மத்தியில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் தரம்தாழ்ந்துவிட்டது. பா.ஜ. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.