மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு : தா.மோ. அன்பரசன் அறிக்கை
8/22/2015 11:48:51 AM
சென்னை: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சரசங்கால் கிராமத்தில் வரும் 22ம் தேதி திமுக மகளிர் அணி சார்பில் மதுவை எதிர்க்கும் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. இதில், மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தலைமை வகிக்கிறார்.மகளிர் அணி தலைவர் காஞ்சனா கமலநாதன் வரவேற்று பேசுகிறார். துணை பொதுச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் நிர்வாகிகள் சிந்திகெயால், நூர்ஜகான்பேகம், சங்கரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை கழக முதன்மை செயலாளர் துரைமுருகன், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன், தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில், திமுக தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு தாரை தப்பட்டையுடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.