இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு : டெல்லி விரைந்தனர் தனிப்படை போலீசார்
8/22/2015 11:38:58 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மீது ஜாமீனில் வெளி வரமுடியாதபடி 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர்.பிரதமர் மோடி சென்னைக்கு சமீபத்தில் வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து பேசிய இளங்கோவன், சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சத்தியமூர்த்திபவன் தாக்கப்பட்டது. இளங்கோவன் வீட்டை முற்றுகையிட்டும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நேற்று காலையில் காங்கிரஸ் அலுவலகம் தாக்கப்பட்டது.தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில், இளங்கோவன் மீது சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் ஊழியராக பணியாற்றி வந்த வளர்மதி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில், காமராஜர் அரங்கத்தில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் அதற்கு மாநில தலைவர் இளங்கோவன், நிர்வாகி நாராயணன் ஆகியோர்தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கேட்டபோது தன்னை வேலையை விட்டு நீக்கியதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.இந்தப் புகார் மீது தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இது குறித்து இணை கமிஷனர் அருண், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் சிவபாஸ்கர், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையினர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு இந்திய தண்டனைச் சட்டம் 323, 509, 354, 506(1) மேலும் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்,406, 420 ஆகிய 7 பிரிவுகளின் கீழ் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர் கீழ்கோர்ட்டில் ஜாமீன் பெற முடியாது. செஷன்ஸ் அல்லது ஐகோர்ட்டில்தான் ஜாமீன் பெற முடியும். இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இளங்கோவன் ஜாமீன் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், கைது செய்வதற்கு இடைக்காத தடை பிறப்பிக்க முடியாது. விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலையில் திடீரென்று இளங்கோவன் டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவர், நண்பர்கள் வீட்டில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மேலிட தலைவர்களையும் அவர் நேற்று மாலை சந்தித்து இந்த சம்பவங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இளங்கோவன் மீதான புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசில் ஒரு பிரிவினர் இன்று காலையில் டெல்லி சென்றுள்ளதாகவும், அவர்களுக்கு உதவியாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் இளங்கோவனை அவர்கள் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து சென்னை போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முகாந்திரம் இருந்ததால்தான் வழக்குப்பதிவு செய்வோம். இப்போதைக்கு வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதேபோல தேவைப்பட்டால் கைது நடவடிக்கைகளையும் எடுப்போம். வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.இளங்கோவனை கைது செய்ய தனிப்படை டெல்லி சென்றுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.