ஆஷஸ் கடைசி டெஸ்ட் ஆஸி. சிறப்பான தொடக்கம்
8/21/2015 2:27:46 PM
ஓவல்: இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4 ஆட்டங்கள் முடிவில் 3-1 என தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விட்ட நிலையில், கடைசி டெஸ்ட் ஓவலில் நேற்று துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்கள் ரோஜர்ஸ், வார்னர் பேட்டிங்கை துவங்கினர். இருவரும் விக்கெட்டை இழந்து விடக்கூடாது என நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். இதனால் முதல் 15 ஓவரில் ஆஸ்திரேலியா 28 ரன் தான் எடுத்தது. முதல் பவுண்டரியே 15வது ஓவரில் தான் அடிக்கப்பட்டது. முதல் விக்கெட்டிற்கு இருவரும் 110 ரன் சேர்த்த நிலையில், ரோஜர்ஸ் 43 ரன்னில் வுட் பந்தில் கேட்ச் கொடுத்தார். அடுத்து வார்னருடன் சுமித் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடிய நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 85 ரன்னில் மொயின் அலி பந்தில் தைத்திடம் கேட்ச் கொடுத்தார்.பின்னர் வந்த கடைசி டெஸ்ட்டில் ஆடும் கேப்டன் கிளார்க் 15 ரன் எடுத்திருந்த போது ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். 4வது விக்கெட்டிற்கு சுமித்துடன், வோக்ஸ் ஜோடி சேர்ந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன் எடுத்திருந்தது. சுமித் 78 ரன், வோக்ஸ் 47 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.