திருவள்ளூரில் டெங்கு பரவுகிறது: பீதியில் மக்கள்
8/21/2015 2:12:39 PM
திருவள்ளூர்: திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்ட பலர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூர் வடக்கு ராஜ வீதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி நூதனபிரியா(22). இவர் 4 மாத கர்ப்பிணி. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபோல் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இது குறித்து சுகாதாரத்துறை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘ டெங்கு, மூளை காய்ச்சல் பாதிப்பு ஜூன் மாத இறுதியில் தான் தொடங்குகிறது. செப்டம்பர் மாதத்தில் அதிகமாகி டிசம்பர் வரை தொடரும். தற்போது, பருவ மழை சரியாக பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு அளவில் மழை பெய்துள்ளது. இதில் இருந்து உருவான கொசுக்களால் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி இருக்க வேண்டும். உத்தரவுகள் போடப்பட்டாலும், கீழ் நிலையில், சரியாக செயல்படுத்தப்படவில்லை. நோய் தடுப்புக்கு போதிய நிதி அளித்தல், தேவையான ஆட்களை தருதல் அவசியம். தற்போதைய நிலை தொடருமானால், செப்டம்பர் மாதத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே, இப்போதாவது நோய் தடுப்பு பணிகளில் அரசு அக்கறை காட்ட வேண்டும்’ என்றார்.