ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் முர்ரே, பென்சிக் சாம்பியன்
8/17/2015 2:31:24 PM
டொரண்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை ஆண்டி முர்ரே, பெலிண்டா பென்சிக் ஆகியோர் வென்றுள்ளனர்.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் ஆடவர் பிரிவு ஆட்டங்கள் மாண்ட்ரீல் நகரில் நடந்தன. நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், பிரிட்டன் வீரரான ஆண்டி முர்ரேவுடன் மோதினார். அசத்தலாக ஆடிய ஆண்டி முர்ரே 6-4, 4-6, 6-3 என்ற செட்களில் 3 மணி நேரம் போராடி ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் தொடர்ந்து 8 போட்டிகளில் ஜோகோவிச்சிடம் பெற்ற தோல்விக்கு ஆண்டி முர்ரே பழி தீர்த்தார். இந்த ஆண்டில் ஆண்டி முர்ரே கைப்பற்றிய நான்காவது சாம்பியன் பட்டம் இது. பேஸ்லைன் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆண்டி முர்ரே 11-வது முறையாக மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டின் இரண்டாவது கேமில் ஜோகோவிச்சின் சர்வீஸ் கேமை முறியடித்த ஆண்டி முர்ரே 3-0 என கேம் கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றார். ஐந்தாவது கேமில் தனது சர்வீஸில் 7 பிரேக் பாயிண்ட்களை காப்பாற்றிய முர்ரே 4-1 என முன்னிலையை அதிகரித்தார். 5-2 என்ற கேம் கணக்கில் முர்ரே முன்னிலையில் இருந்த நிலையில் அவரது சர்வீஸில் 3 சாம்பியன்ஷிப் பாயிண்ட்களை ஜோகோவிச் தடுத்தாலும், முர்ரே அதிரடி ஆட்டத்தின் மூலம் செட்டை கைப்பற்றினார். ஆண்டி முர்ரேவின் பயிற்சியாளரான அமேலி மவுரஸ்மோவுக்கு நேற்று குழந்தை பிறந்துள்ளது. தான் கைப்பற்றிய ரோஜர்ஸ் கோப்பை சாம்பியன் பட்டத்தை பயிற்சியாளர் அமேலி மவுரஸ்மோவுக்கு அர்ப்பணிப்பதாக முர்ரே தெரிவித்தார்.
பென்சிக் அசத்தல் டொரண்டோவில் நடந்த மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் சுவிட்ஜர்லாந்து வீராங்கனையான பெலிண்டா பென்சிக், இரண்டாம் நிலை வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலேப்புடன் மோதினார். அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்திருந்த பென்சிக், ஹாலேப்பை இறுதிப்போட்டியில் சற்று சிரமப்பட்டே வெல்ல முடிந்தது. பெலிண்டா பென்சிக் 7-6(5), 6-7(4), 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது, உடல்நிலை பாதிப்பு காரணமாக ஹாலேப் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதன் மூலம் பெலிண்டா பென்சிக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இவ்வாறு அவர் கூறினார்.