அறைகளுக்குள் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம் சென்னை அரசு கட்டிடங்களில் அடிப்படை வசதி குறைபாடால் மக்கள் அவதி
8/17/2015 2:08:57 PM
சென்னை தமிழகத்தில் தலைநகரம் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அரசு துறைகளுக்கும் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகள் அலுவலகம் அனைத்தும் சென்னையிலேயே செயல்பட்டு வருகிறது. அதே போல் சென்னை உள்ளிட்ட மாவட்ட அலுவலகம் மற்றும் 10 தாலுகா அலுவலகம் உள்ளிட்டவை சென்னை கலெகடர் அலுவலகத்தில் செயல்படுகிறது. அதே போல் நீதித்துறை, வணிகத்துறை போன்ற பல்வேறு துறைகளுக்கும் தலைமையகமாக சென்னையே செயல்பட்டு வருகிறது.இதனால் சென்னையில் ஏராளமான அரசு அலுவலகங்கள் சொந்த கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலான கட்டிடங்களின் பராமரிப்பு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றில் குறிப்பாக மாநில அரசின் அலுவலக கட்டிடங்கள் அனைத்தும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வருகிறது.
ஒரு சில துறைகளுக்கு புதிய கட்டிடங்களும், பெரும்பாலான துறைகள் பாரம்பரியமான பழைய கட்டிடங்களி–்லும் செயல்படுகின்றன. ஆனால் இவ்வாறு செயல்படும் அரசு கட்டிடங்களின் நிலையை பார்த்தால் பீதி ஏற்படும் அளவுக்கு உள்ளது. குறிப்பாக எழிலகம், நீதித்துறை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் எப்போது கட்டிடம் இடிந்து தலையில் விழுமோ என்ற அச்சத்துடனேயே பணிபுரியும் நிலை உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சில கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு மேற் தளத்தில் உள்ள கழிவு நீர் போன்றவை துறை அலுவலக அறைகளுக்கு உள்ளேயே பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தை நாள் முழுவதும் பொறுத்துக் கொண்டு ஊழியர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வரும் பொது மக்களும் இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த சூழலில் கடந்த 2012ம் ஆண்டு சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் எழிலகம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சமூக நலத்துறை, தொழில் வணிக இயக்குனர் அலுவலகம் ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்தன. இவற்றில் இருந்த கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாகின. மேலும் தீயை அணைக்க சென்ற அதிகாரி ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். 1801ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் மிகவும் மோசமான பராமரிப்பு காரணமாக தீ அணைப்பு பணியை கூட உடனடியாக செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. மழைக்காலங்கள் வந்து விட்டால் அரசு கட்டிடங்களின் நிலை அந்தோ பரிதாபம்தான். ஜன்னல்கள் உடைந்து போய், மேற் கூரை விரிசல்கள் ஏற்பட்டு, மழை நீர் உள்ளே பெருக்கெடுத்து விடும்.ஏற்கனவே ஆமை வேகத்தில் நடைபெறும் அரசு அலுவலக பணிகள் இது போன்ற காரணங்களால் மேலும் நத்தை வேகத்திற்கு மாறிவிடும். இதனால் திண்டாடுவதும், அவதிப்படுவதும் ஊழியர்களும், பொதுமக்களும்தான்.
மேலும் ஏராளமான ஆவணங்கள் நாசமாவதால் ஏற்கனவே செய்து வந்த திட்டங்கள், கோரிக்கைகள், பொதுமக்கள் மனுக்கள் உள்ளிட்டவை கடுமையான பாதிப்புக்கும், தேவையில்லாத கால தாமதத்திற்கும் உள்ளாகிறது. அண்மையில் மக்கள் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் அரசு கட்டிடம் ஒன்றில் விரிசல் ஏற்பட்டது. இதனால் கழிவறை தண்ணீர் அப்படியே அறைகளுக்குள் புகுந்தது. போதாக்குறைக்கு ஒரு நீச்சல் குளம் அளவுக்கு, கணுக்கால் மட்டத்திற்கு அறைக்குள்ளேயே தேங்கி நாறத் தொடங்கியது. மேலும் இது ஆவண காப்பக அறைக்குள்ளும் புகுந்ததால், ஊழியர்களோ அந்த பக்கமே தலைவைத்து படுக்காமல் தலை தெறிக்க ஓடுகின்றனர். இதனால் ஏராளமான மக்கள் குறைகள் தீர்க்கப்படாமல் அப்படியே மாத கணக்கில் தேங்கி கிடக்கின்றன.அதே போல் சமீபத்தில் சென்னை கலெக்டர் அலுவலக்த்திற்கு வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சென்னை கலெக்டர் அலுவலகம் ராஜாஜி சாலை சிங்காரவேலர் மாளிகையில் உள்ளது.
8 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை, மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள், முத்திரைத்தாள் அலுவலகம், 10 தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன. இங்கு, நாள்தோறும் வழக்கறிஞர்கள், போலீசார், விசாரணை கைதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இவ்வாறு சென்னையில் செயல்படும் முக்கிய அலுவலகமான அங்கு முறையான கழிவறை, பாத்ரூம் வசதிகளோ, அடிப்படை வசதிகளோ கிடையாது என்று புகார் தெரிவித்தனர். ஏற்கனவே தங்களது புகார்களை தெரிவிக்க இது போன்ற அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு இந்த அலுவலகங்களே இவ்வாறு கோளாறுகளால் தத்தளிக்கும் போது அரசு மீதான மக்களின் நம்பிக்கை அப்படியே பொய்த்து போய் விடுகிறது.இதனால், மனு அளிக்க வந்து நீண்ட நேரம் காத்திருக்கும் பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்படும் கட்டிடத்துக்கே இந்த நிலைமையா என இங்கு வரும் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.
மேலும், முறையான கழிவறை வசதியில்லாததால் இங்கு பணிபுரியும் ஊழியர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.நூலகம் இல்லா ஊரின் அழகும் பாழ். அறிவும் பாழ் என்பார்கள். பல கோடி ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை இடம் மாற்றுவதற்கு தற்போதைய ஆட்சியாளர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றி விடலாம் என்று குயுக்தியாக யோசனையும் செய்தார்கள். ஆனால் நீதித்துறையின் உதவியால் அது தடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக இந்த நூலகத்தை எந்த பராமரிப்பும் செய்யாமல் அப்படியே கிடப்பில் போட்டது பொதுப்பணித்துறை. பின்னர் இந்த விவகாரம் பொதுமக்களாலேயே நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அண்ணா நூலகத்தை இடம் மாற்றக் கூடாது என்பதுடன், அதை அப்படியே முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த நூலகம் ஏழை மாணவர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட எண்ணற்றோருக்கு பயன்பட்டு வருகிறது.
இந்த வேளையில், நீதி மன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டு விட்டு பொதுப்பணித்துறை மெத்தனமாக இருந்து வருகிறது. இதனால் இங்கு ஏசி முறையாக செயல்படவில்லை. உரிய வசதிகள் இல்லை என்று மாணவர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். நூலகம் முறையாக செயல்படவில்லை, அங்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று பாரபட்சம் இன்றி அனைத்து ஏடுகளிலும் புகைப்படங்களுடன் செய்திகளும், மக்கள் கோரிக்கைகளும் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் இவை எதுவும் அரசின் செவிகளுக்கோ, பார்வைக்கோ எட்டியதாக கூட தெரியவில்லை.அரசு அலுவலக கட்டிடங்களில் கழிவறை தண்ணீர் புகுந்து நாறி கிடப்பது, கட்டிடங்கள் விரிசல் அடைந்து இருப்பது, நூலகங்கள் பராமரிப்பு இன்றி இருப்பது, அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதி செய்து தராமல் இருப்பது என்பது பொதுப்பணித்துறை உள்ளிட்ட தமிழக அரசின் நிர்வாகம் எவ்வாறு தேங்கி ெமத்தனமாக இருக்கிறது என்பதற்கு நேரடியான எடுத்துக்காட்டு என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?