மதுவிலக்கு போராட்டத்தில் களப்பலியான காந்தியவாதி சசி பெருமாளின் போராட்ட பாதை
8/1/2025 12:37:33 PM
சேலம்: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு குறித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதிலும் கடந்த 3 ஆண்டுகளாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்து வருகிறது. இதற்கு வலுவான அடித்தளம் அமைத்து போராடியதோடு, மது விலக்குக்காக தனது உயிரையும் ெகாடுத்து புதிய விடியலுக்கு அச்சாரமிட்டுள்ளார் சேலத்தை சேர்ந்த காந்தியவாதி சசிபெருமாள்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணச்சாலை இ.மேட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சசிபெருமாள் (59). இவர், தனது 16வது வயதில் சேலத்தில் காமராஜர் நடத்திய மது ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 5 நாள் சிறை தண்டனையும் அனுபவித்தார். பின்னர் பொதுநலன் தொடர்பான பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். 1984ம் ஆண்டு இளம்பிள்ளை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ெநசவாளர்களை ஒருங்கிணைத்து ‘நியூ இந்தியா லேபர் யூனியன்’ என்ற தொழிற்சங்கத்தை ஆரம்பித்தார்.
இதன் செயலாளராக பொறுப்பு வகித்து தொழிலாளர்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அவரது அமைப்பில் உள்ள தொழிலாளர்கள் பலர், சம்பாதிக்கும் பணத்தில் பாதியை குடிப்பதற்கே செலவிட்டதால் மனமுடைந்தவர், உள்ளூரில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். ஆனால் அதற்கு எந்த பலனும் இல்லை. உள்ளூரில் மட்டும் ேபாராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து 2006ம் ஆண்டு, முதல் முறையாக சென்னையில் தனது ேபாராட்டத்தை துவக்கினார். 2006ம் ஆண்டு காந்தி நினைவு நாளன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதுவிற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை காந்தியவாதிகள் நடத்தினர். அதில், சேலம் பிராங்கிளின் ஆசாத் காந்தி, சசி பெருமாள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 4வது நாளில் சசி பெருமாள் மயக்கமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் முன்புள்ள மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களை நடத்தத் துவங்கினார்
.2010ம் ஆண்டு இளம்பிள்ளை அருகே உள்ள சித்தனூர் காட்டுவளவில் தார் சாலை அமைக்க கோரி அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தினார். பின்னர் அந்த பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. 2012ம் ஆண்டு இடங்கணச்சாலை இ.மேட்டுக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்ட தாமதிப்பதை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்.2013ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சென்னை மெரினாவில் பூரண மதுவிலக்கு கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை சசி பெருமாள் துவங்கினார். தனி ஒரு ஆளாக தொடர் உண்ணாநிலையில் இருந்து அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தினார். போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
34 நாட்களுக்கு பின் மகாத்மா காந்தியின் தனி செயலர் கல்யாணத்தால், அந்த உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு (2014) ஜனவரி 30ம் தேதி, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். அங்கும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க போராட்டம் கைவிடப்பட்டது.இதே போல் கடந்த வருடம், மதுவை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினார். இதில் வசூலான ரூ.1285ஐ தமிழக அரசுக்கு மணியார்டர் அனுப்பி வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த தொகையை அரசு மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பியது.
இதே போல் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை மதுவிலக்கை வலியுறுத்தி தீபசுடர் ஓட்டம், ரயிலில் விழிப்புணர்வு, பள்ளி மாணவ, மாணவியருக்கு துண்டு பிரசுரம், இளைஞர்களின் கால் பிடித்து ெகஞ்சும் போராட்டம், திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை என்று பல்வேறு இடங்களில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று செல்போன் டவர் மீது ஏறி போராட்டம், மது ஒழிப்புக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு வகுப்புகள் போன்றவற்றை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட சசிபெருமாள் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதை கண்டித்து அப்போது போராட்டம் நடத்தினார். பின்னர், டிராபிக் ராமசாமிக்கு ஆதரவு தெரிவித்தார்.மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தவுடன் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறந்ததையடுத்து தமிழகத்தில் ஒருவாரம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டார். பின்னர் ராமேஸ்வரத்தில் நடந்த அப்துல் கலாம் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்ேகற்று விட்டு, மார்த்தாண்டம் பகுதி மக்களின் அழைப்பை ஏற்று, நேற்று போராட்டத்தில் கலந்து ெகாண்டார். இந்த போராட்டம் தான் அவரது உயிரை பறித்தது.