பயணங்கள் முடிவதில்லை
7/16/2015 2:10:34 PM
பிரபஞ்சம் மிகப்பெரிது. கற்பனையில் கூட விரித்துப் பார்ப்பது கடினம். நாம் வாழும் பூமி சின்ன எறும்பு போல. ஆனால், மனிதர்களின் மூளை பெரிது - அளவில் அல்ல, அறிவில். பூமியை விட்டு அகன்று, வானியல் ஆராய்ச்சிகள் ஆதிகாலத்தில் இருந்தே துவங்கிவிட்டன. ஆனால், கண்டறிந்தவை கைம்மண்ணளவு; அறிய வேண்டியவை கடலளவு.சூரியக் குடும்பத்தில் 9வது கிரகம் புளூட்டோ. அதை ஆராய்வது எளிதல்ல. புளூட்டோவின் தூரம், பூமியில் இருந்து 500 கோடி கிலோ மீட்டர். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா புளூட்டோவை ஆராய முனைந்தது. ‘நியூ ஹாரிசன்’ விண்கலத்தை, 2006ம் ஆண்டு புளூட்டோவுக்கு அனுப்பியது. ஒன்பதரை ஆண்டு பயணத்துக்குப் பின்பு புளூட்டோவை தற்போதுதான் நெருங்கியது. நேற்றுமுன்தினம் வெற்றிகரமாக பூமிக்கு விண்கலம் சிக்னல் அனுப்பியது. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தனர்.புளூட்டோ மற்றும் துணைக்கோள்களை நியூ ஹாரிசன் படம் எடுத்து அனுப்பத் துவங்கியிருக்கிறது. இதன் மூலம் அறிய முடியாத அதிசய உண்மைகள் இனி தெரியவரும்.
ஆராய்ச்சிகளுக்கு எல்லை இல்லை. எல்லை வைத்துக்கொண்டால் எதையும் கண்டறிய முடியாது. விண்வெளி ஆராய்ச்சி செலவு மிக்கது. இதற்கென வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஆராய்ச்சியாளர்கள் கிடைப்பதும் அரிது. ஆனால், எந்த நவீன வசதிகளும் இல்லாத காலத்தில், இந்தியாவில் ‘ஆர்யபட்டா’க்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் கண்டறிந்த உண்மைகள், காலத்தின் பொக்கிஷம். பண்டைய இந்தியர்களின் ஆராய்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தல், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் விஸ்வரூபம் எடுத்திருக்கலாம் என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை.புளூட்டோ ஆராய்ச்சி புதிய மைல்கல் என்றாலும், விடை தெரியாத கேள்விகள் இன்னும் பல நூற்றாண்டு காலம் தொடரலாம்.
செவ்வாய் மற்றும் நிலவில் மனிதர்கள் வசிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. கற்பனைக் கதைகள் ஏராளமாக எழுதப்பட்டிருக்கின்றன. புவி ஈர்ப்பு விசை, பிராண வாயு, தண்ணீர் என உயிர் வாழ ஏற்ற காரணிகள், புவியில் இருக்கின்றன. இவை மற்ற கிரகங்களில் உள்ளனவா, உயிரினங்கள் அங்கு வாழ முடியுமா என்பது இன்னும் மர்மமான விஷயம்தான்.விமானப்பயணம் போல், வேற்றுக்கிரகங்களுக்கும் பறக்க மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். செவ்வாயில் வசிப்பதற்குப் புக்கிங் கூட நடந்திருக்கிறது. வேற்றுக்கிரக வாசிகள் குறித்து திரைப்படங்களில் இன்னும் கதை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.விண்வெளியை மனித மூளைகள் எல்லை மீறி ஆராய்வது ஆச்சர்யம் என்றாலும், பயணங்கள் முடியப்போவதில்லை.