மெல்லிசை ஓய்ந்தது
7/14/2015 2:13:28 PM
இசையால் மக்களை உருக வைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நம்மிடம் இருந்து கரைந்துவிட்டார். ஆனால், அவர் இசையமைத்த இனிய கீதங்கள், காலத்தால் அழிக்க முடியாத வசந்தம்.தந்தையைச் சிறுவயதிலேயே இழந்த எம்எஸ்வியைப் பசியும், பட்டினியும் உலுக்கியது. தாய் நாராயணியால் பொறுத்துக்கொள்ள முடியாமல், குளத்தில் எம்எஸ்வியை மூழ்கடித்து, தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் தாத்தா தடுத்துவிட்டார். இல்லாவிட்டால், இசைச் சக்கரவர்த்தியின் பெருமை உலகுக்குத் தெரிந்திருக்காது.ஏட்டுக்கல்வி எம்எஸ்விக்குப் பிடிக்கவில்லை. பிறவிக்கலைஞராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கிராமத்தில் பிறந்தாலும், தமிழ் தான் இவரது உயிர்மூச்சாக இருந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 1200க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ராமமூர்த்தியுடன் சேர்ந்தும், தனியாகவும் இசையமைத்திருக்கிறார். நீலகண்ட பாகவதர், டி.ஆர்.பாப்பா, எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்புராமன் உள்ளிட்ட பிரபலங்களின் இசை கேட்டு வளர்ந்தவர்.
ஹார்மோனியப் பெட்டி, எம்எஸ்வி சொன்னதெல்லாம் கேட்டது.1952ல் ‘ஜெனோவா’, ‘பணம்’ உள்ளிட்ட படங்களில் துவங்கியது அவரது இசைப்பயணம், அவரது இறுதிமூச்சு வரை நீடித்தது. ஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாத, பாடல்களைச் சிரச்சேதம் செய்யாத மெல்லிசை, ரசிகர்களுக்குத் தேனாக இனித்தது.டி.எம்.சவுந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சுவர்ணலதா என இவரது இசை லயத்தில் பாடல்களைப் பாடிய பிரபலப் பாடகர்களின் பட்டியல் நீளும். பிரபலக் கதாநாயக நடிகர்களின் படங்கள் ஓடியதற்கு, எம்எஸ்வி - ராமமூர்த்தியின் இசையின் பங்கு முக்கியமானது என்றால் மிகையில்லை.
‘நீராரும் கடலுடுத்த..’ தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர் எம்எஸ்வி என்பது பலருக்கும் தெரியாது. பெர்சியா, எகிப்து, சீனா, ஜப்பான், லத்தீன் என வெளிநாட்டு இசையையும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இசையில் இவரது புதுமை முயற்சிகள் பிரசித்தம்.‘அச்சம் என்பது மடமையடா’(மன்னாதி மன்னன்) என்று இவரது இசை முழங்கவும் செய்யும். ‘எங்கே நிம்மதி?’(புதிய பறவை) என்று கேள்வியும் கேட்கும். ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’(பாச மலர்கள்) என்று கண்ணீரால் கரையவும் வைக்கும். ‘எங்கேயும் எப்போதும்’(நினைத்தாலே இனிக்கும்) என்று உருகவும் செய்யும். ‘ஏன் பிறந்தாய் மகனே!’(பாகப்பிரிவினை) என்று ஏங்கவும் வைக்கும். இவர் இசையமைத்த பாடல்கள் நவரச முத்துகள். இறுதி வரை எளிமையுடன் வாழ்ந்த எம்எஸ்வியின் மறைவால், இசை உலகமே கண்ணீர் வடிக்கிறது. மற்றொரு எம்எஸ்வி தோன்றுவது சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.