விடைத்தாளை மாற்றி மாணவியை பெயிலாக்கிய கொடுமை ஆசிரியர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை கல்வித்துறையில் அவலம்
6/11/2025 2:47:37 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. சமையல் தொழிலாளி. இவரது மகள் கவிதாமணி. கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 கணக்கு பதிவியல் பாடம் எடுத்து படித்து வந்தார்.கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. அதில் இவர் மொத்தம் 584 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்ததாக முடிவு வெளியானது. இவர் பொருளாதார பாடத்தில் 200க்கு 24 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவியோ, கண்டிப்பாக இவ்வளவு குறைவான மதிப்பெண் வர வாய்ப்பு இல்லை. எனவே தான் தேர்வு எழுதிய விடைத்தாள் நகலை பெற்று பார்க்க வேண்டும் என அதற்கான தொகையினை செலுத்தி விடைத்தாளை பெற்றுள்ளார். அதில் மாணவி கவிதாமணியின் பெயர் மற்றும் பதிவு எண்ணும் இருந்துள்ளது.
ஆனால் விடைத்தாள் அவர் எழுதியது இல்லை என்பதும், அந்த விடைத்தாளில் வேறு ஒருவரின் கையெழுத்து இருந்தது என்பதையும் பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து தான் படித்த பள்ளியை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவர்களும் அந்த கையெழுத்து மாணவி கவிதாமணியின் கையெழுத்து இல்லை என்பதை உறுதி செய்தனர்.இது குறித்து கல்வித்துறையில் அளித்த புகாரினை தொடர்ந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாணவியின் விடைத்தாள் மறுகூட்டல் செய்து மாணவி கவிதாமணி 124 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக நேற்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விடைத்தாள் மாறியது குறித்து சென்னையில் உயர் அலுவலர்கள் வேலூரில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாணவி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டில் தொடரும் முறைகேடு புகார்களால் பெற்றோர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் பகிர்வு, விடைத்தாள் நகல் மாற்றம் உள்ளிட்ட தொடரும் குளறுபடிகளால் கல்வித்துறை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.