முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசிடம் கேரளா மனு
5/16/2015 12:31:18 PM
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளா அரசு மனு அளித்துள்ளது.முல்லைப் பெரியாறு அணை அதிக பலத்துடன் இருப்பதால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என கடந்த வருடம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திய போதிலும் அணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனாலும் அணைக்கு ஆபத்து என்றும் புதிய அணை கட்டுவதுதான் பிரச்னை தீர ஒரே வழி என்றும் கேரள அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதிய அணை கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தில் பாறைகளுக்கான உறுதித்தன்மையை பரிசோதிக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு முடுக்கிவிட்டுள்ளது. கேரள நீர்ப்பாசனத் துறையின் கீழ் உள்ள கேரள பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பரிசோதனையை நடத்தி வருகிறது. கோவையிலுள்ள ஒரு நிறுவனம் பாறைகளை துளையிடும் பணியை செய்து வருகிறது. கேரள அரசின் இந்த நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடக்கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட அனுமதி கோரி மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரள அரசு நேற்று ஒரு மனு அளித்துள்ளது. அந்த மனுவில், ‘’ புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கவேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறில் புதிய அணைக்காக சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த ஆய்வு நடத்த தேசிய வனவிலங்கு வாரியம் மத்திய அரசிடம் ஏற்கனவே சிபாரிசு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு கடந்த டிசம்பரில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.