ஜெயலலிதா தலைமையில் 22ம் தேதி பதவி ஏற்பு விழா: அமைச்சரவையில் மாற்றம் இல்லை : 4 பேருக்கு புதிதாக வாய்ப்பு
5/16/2015 12:20:29 PM
சென்னை: ஜெயலலிதா தலைமையில் வரும் 22ம் தேதி பதவி ஏற்பு விழா நாளில், அமைச்சரவையில் மாற்றம் செய்யாமல், மேலும் 4 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை உடனடியாக பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை. பன்னீர்செல்வம் உட்பட 20 அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை போயஸ்கார்டனுக்கு அழைத்து, டெலிபோனில் மட்டுமே பேசினார். அதில் சில அமைச்சர்களுக்கு டோஸ் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் 9 அமைச்சர்களை அவர் அழைக்கவில்லை. ஆனால் அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. இதனால் அவர்களது பதவி பறிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் குற்றச்சாட்டுகள் இல்லாததால் அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படும். அழைத்து டோஸ் வாங்கிய அமைச்சர்களிடம் இருந்துதான் பதவி பறிக்கப்படும் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மேலும் ஜெயலலிதா முதல்வராக இல்லாத காலங்களில் அதிகாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அமைச்சர்கள் பயங்கரமாக கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டங்களும் நடத்தின. இதனால் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களின் பதவி கண்டிப்பாக பறிக்கப்படும். இதற்காக உளவுத்துறையிடம் இருந்து தகவல்களும் திரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.ஆனால் ஜெயலலிதா, கடந்த இரு நாட்களாக புதிய அமைச்சரவை அமைப்பது குறித்தும், டெல்லியில் கர்நாடகா மேல் முறையீடு செய்தால் அதை எதிர்கொள்வது குறித்தும் தீவிரமாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதில் தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டே உள்ளதால், தற்போது அமைச்சரவையில் இருக்கும் யாரை கழட்டி விட்டாலும் அதனால் கட்சிக்குள் தேவையில்லாத பிரச்னை ஏற்படும். அதனால் தற்போதைய அமைச்சரவையை அப்படியே வைத்துக் கொள்ள ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாராம். இது தொடர்பாக 22ம் தேதி நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. அதோடு, ஏற்கனவே பதவி பறிக்கப்பட்ட கே.பி.முனுசாமி, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, தற்போது மருத்துவமனையில் உள்ள செந்தூர்பாண்டியன் ஆகிய 3 அமைச்சர்களுக்குப் பதில் புதிய அமைச்சர்களை சேர்த்து தனது அமைச்சரவையை 33 பேர் கொண்ட அமைச்சரவையாக மாற்ற ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாராம்.
அதில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், நயினார் நாகேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களிடம் இருந்து முக்கியமான இலாகாக்கள் மாற்றப்படும், அவர்களுக்கு டம்மியான இலாகா வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் குறித்து அதிமுக வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுப்பப்பட்டு வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.