ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு : அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யா தகவல்
5/15/2015 3:28:13 PM
பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் வாதிட்டவர் மூத்த வக்கீல் பி.வி.ஆச்சார்யா. பெங்களூருவில் இன்று அவர் அளித்த பேட்டி: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. ஆனால் மேல் முறையீட்டு மனு விசாரணை தீர்ப்பில் கீழ் நீதிமன்றத்தில் கருத்தில் 90 சதவீதம்கூட ஏற்கவில்லை. வெறும் சொத்து கணக்கை மட்டுமே அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் ஓரிரு தவறுகள் இல்லை. ஓராயிரம் தவறுகள் உள்ளது. தீர்ப்பின் ஒவ்வொரு பக்கத்திலும் என்னனெ–்ன தவறுகள் உள்ளது என்பதை மிகவும் கவனத்துடன் குறிப்பெடுத்து வருகிறோம். விரைவில் ஒட்டு மொத்தமாக என்னென்ன தவறுகள் உள்ளது என்பதை தெரிவிப்பேன்.
மேலும் நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசு பிரதிவாதியாக சேரவில்லை என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார். அவர் கருத்து தவறு. மேல்முறையீட்டு விசாரணை நடந்த சமயத்தில் அரசு வக்கீலாக இருந்த பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது, அவரை வாதம் செய்ய அனுமதிக்ககூடாது என்று தி.மு.க. பொதுசெயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார். அப்போது பவானி சிங்கிடம் இது குறித்து கேட்டபோது, தமிழக ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் தான் என்னை அரசு வக்கீலாக நியமனம் செய்து கடிதம் கொடுத்துள்ளது. கர்நாடக அரசு நியமனம் செய்யவில்லை என்று ஓபன் கோர்ட்டில் நீதிபதியிடம் பவானி சிங் கூறியுள்ளார். அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்காத நிலையில், மேல் முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதி பி.குமார் தலைமையிலான அமர்வு கடந்த பிப்ரவரி 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.பொதுவாக கீழ்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது, அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். ஒருவேளை மனுதாரர்கள் அதை செய்யாமல் தவிர்த்தால், மனுவை விசாரணை நடத்தும் நீதிமன்றம் அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அதற்கான பூர்வீக வாய்ப்பு நீதிபதிக்கு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரணை நடத்திய நீதிபதி, கர்நாடக அரசு பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை என்பது தெரிந்தும், அரசாங்கத்தை சேர்க்கும் முடிவு எடுக்காமல் தட்டி கழித்துள்ளார்.
மேலும் மேல்முறையீட்டு மனு தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பல தவறுகள் உள்ளது.அரசியலமைப்பு சட்டப்படி நீதிபதி தான் வழங்கிய தீர்ப்பில் தவறு இருப்பதை உணர்ந்து கொண்டாலும், அதை திருத்தவோ அல்லது மாற்றம் செய்யவோ அதிகாரம் நீதிபதிக்கு கிடையாது. ஒருமுறை தீர்ப்பு எழுதி கையெழுத்து போட்டபின், அதில் மீண்டும் கைவைக்கும் உரிமை இல்லை. எதுவானாலும் உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்மானிக்க முடியும். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. அங்கு நடக்கும் விசாரணையில் தீர்ப்பு மாறும் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.