பாந்த்யா அதிரடியில் வீழ்ந்தது கொல்கத்தா 5 ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றி: ப்ளே ஆப் நம்பிக்கை நீடிப்பு
5/15/2015 2:39:47 PM
மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 51வது லீக் ஆட்டம், மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பவுலிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் தொடர் காரணமாக, ஐபிஎல்லின் முதல் 2 போட்டிகளில் மட்டும் விளையாடிய பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன், தொடர் முடிந்ததால், மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பினார். மேலும் கொல்கத்தா அணியில் மோர்னே மோர்கெல் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் பும்ரா நீக்கப்பட்டு, வினய் குமார் சேர்க்கப்பட்டார். மும்பை அணி ப்ளே ஆப் வாய்ப்பில் நீடிக்க, இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் களமிறங்கியது.
தடுமாறிய டாப் ஆர்டர் மும்பை அணியின் துவக்க வீரர்களாக, பார்த்தீவ் பட்டேல்-சிம்மன்ஸ் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 29 ரன்கள் சேர்த்தனர். பார்த்தீவ் பட்டேல் 14 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுத்து, ஷாகிப் பந்தில், டீப் மிட் விக்கெட் திசையில் நின்ற, மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சிம்மன்சுடன், கேப்டன் ரோகித் சர்மா ஜோடி சேர்ந்தார். ேமார்னே மோர்கெல் வீசிய 6வது ஓவரில், சிக்சர் ஒன்றை விளாசிய சிம்மன்ஸ், அடுத்த பந்திலேயே மணீஷ் பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். சிம்மன்ஸ் 14 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த ராயுடு, 3 ரன்கள் மட்டும் எடுத்து, ஷாகிப் பந்தில் பவுண்டரி எல்லையில் நின்ற, ரஸ்ஸலிடம் கேட்ச் கொடுத்தார். இதனால் மும்பை 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 4வது விக்கெட்டிற்கு ரோகித் சர்மா-போலார்டு நிதானமாக விளையாடி, 32 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 21 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 30 ரன்கள் எடுத்து, நரைன் பந்தில் போல்டு ஆனார்.
பாந்த்யா மிரட்டல் 5வது விக்கெட்டிற்கு போலார்டுடன் இணைந்த பாந்த்யா மிரட்டினார். அதிரடி வீரர் போலார்டு நிதானத்தை கடைபிடிக்க, கொல்கத்தா பந்து வீச்சை பாந்த்யா வெளுத்து வாங்கினார். உமேஷ் யாதவ் வீசிய 17வது ஓவரில் வரிசையாக 4 பவுண்டரிகளை விளாசினார் பாந்த்யா. ரஸ்ஸல் வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரிகளை விளாசிய பாந்த்யா, அடுத்த பந்தை சிக்சருக்கு விளாசி, 25 பந்துகளில் அரை சதம் கடந்தார். பாந்த்யாவின் அதிரடியால் மும்பையின் ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில் மும்பை 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. பாந்த்யா 31 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 61 ரன்களுடனும், போலார்டு 38 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 33 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் 5வது விக்கெட்டிற்கு 92 ரன்கள் சேர்த்தனர்.
சூப்பர் துவக்கம் சற்றே கடினமான இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக, கம்பீர்-உத்தப்பா களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 5.3 ஓவர்களில் 45 ரன்கள் சேர்த்த நிலையில், ஹர்பஜன் சிங் இந்த ஜோடியை பிரித்தார். 25 ரன்கள் எடுத்திருந்த உத்தப்பா, ஷார்ட் பைன் லெக் திசையில் நின்ற மலிங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதலில் பந்தை பிடிக்க தடுமாறிய மலிங்கா, பின்னர் சுதாரித்து கேட்சை பிடித்தார். அடுத்து வந்த மணீஷ் பாண்டே 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓட, சிம்மன்சின் துல்லிய த்ரோவில், அதே ஓவரில் ரன் அவுட்டானார்.
யூசுப் பதான் அபாரம் 3வது விக்கெட்டிற்கு கம்பீர்-யூசுப்பதான் ஜோடி நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கம்பீர் 29 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து சுஜித் பந்தில் போல்டு ஆனார். அடுத்து வந்த ஷாகிப் அல் ஹசன், 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து, வினய்குமார் பந்தில் ஆட்டமிழந்தார். ரஸ்ஸல் 2 ரன்களில் மலிங்கா பந்திலும், சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் மெக்கிளனகன் பந்திலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்து கொண்டே வந்தாலும், ஒரு பக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய யூசுப் பதான், மலிங்கா பந்தில் சிக்சர் அடித்து, 35 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
மும்பை த்ரில் வெற்றி யூசுப்பதானின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றியை நெருங்கியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட, பரபரப்பு நிலவியது. போலார்டு கடைசி ஓவரை வீசினார். முதல் பந்திலேயே யூசுப்பதானை அவுட்டாக்கி, அதிர்ச்சியளித்தார் போலார்டு. யூசுப்பதான் 37 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் உமேஷ் யாதவ் பவுண்டரி அடித்தார். ஆனால் கடைசி 3 பந்துகளை பியூஸ் சாவ்லா ஒரு ரன் கூட எடுக்காமல் வீணடிக்க, கொல்கத்தா அணியால் கடைசி ஓவரில் 6 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கொல்கத்தா 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. உமேஷ் யாதவ் 2 பந்துகளில் 5 ரன்களுடனும், பியூஸ் சாவ்லா 7 பந்துகளில் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை, 14 புள்ளிகளுடன், பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியதுடன், ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது. பாந்த்யா ஆட்ட நாயகன் விருது வென்றார்.