அம்பத்தூர் ஜமாபந்தியில் 26 மனுக்களுக்கு உடனடி தீர்வு
5/15/2015 2:28:47 PM
அம்பத்தூர்: சென்னையை அடுத்த அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு திருவள்ளூர் கலால் உதவி ஆணையர் முத்துசாமி தலைமை வகித்தார்.அம்பத்தூர் தாசில்தார் லதா, துணை தாசில்தார் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதல் நாளான நேற்று அம்பத்தூர் குறுவட்டமான மண்ணூர்பேட்டை, அத்திப்பட்டு, அம்பத்தூர், பாடி, முகப்பேர், காக்காபள்ளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் பட்டா, ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல், முதியோர், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்று திறனாளி ஆகியோருக்கான உதவி தொகை, சாதி, இருப்பிட சான்று உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 218 பேர் மனு கொடுத்தனர். இதில் 26 மனுக்களுக்கு அதிகாரிகள் மூலம் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இன்று (15-ம் தேதி) ஒரகடம், பட்டரைவாக்கம், மேனாம்பேடு, கொரட்டூர் ஆகிய கிராமங்களுக்கும், 19-ம் தேதி கோயில் பதாகை, திருமுல்லைவாயல், பாலவேடு, முத்தாபுதுப்பேட்டை, மிட்னமல்லி ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது.வரும் 20-ம் தேதி கீழ்கொண்டையூர், ஆலத்தூர், பாண்டேஸ்வரம், அரக்கம்பாக்கம், மோரை, மேல்பாக்கம், கதவூர், வெள்ளச்சேரி ஆகிய கிராமங்களுக்கும், 21-ம் தேதி வெள்ளனூர், பொத்தூர், பம்மதுகுளம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடைபெறுகிறது என்று வட்டாட்சியர் அலுவலக அதிகாரி முத்துசாமி தெரிவித்தார்.