செக்ஸ் டார்ச்சரால் பள்ளி ஆசிரியை தற்கொலை ஹெச்.எம். மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரி காலில் விழுந்து கணவர் கதறல்
5/13/2015 2:42:07 PM
புதுக்கோட்டை: தலைமை ஆசிரியர் கொடுத்த செக்ஸ் டார்ச்சர் காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தீக்குளித்து தற்கொலை செய்தார். இதற்கு காரணமான தலைமை ஆசிரியை கண்டிக்கக்கோரி அதிகாரி காலில் விழுந்து கணவர் கதறி அழுதார்.புதுக்கோட்டை காமராஜபுரத்தை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி புவனேஸ்வரி(25). இவர் தெற்கு ராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். இந்த பள்ளி தலைமையாசிரியர் மதிவாணன், புவனேஸ்வரிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த ஆசிரியை கடந்த 7ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமையாசிரியர் மதிவாணன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் தெற்கு ராயபட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் நேற்று எஸ்பி அலுவலகத்தையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். பின் எஸ்பி உமா, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அருள்முருகன் ஆகியோரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:தலைமையாசிரியர் மதிவாணன், உடன் பணியாற்றிவரும் ஆசிரியைகளிடமும், பெண் ஊழியர்களிடமும், ஆபாசமான வார்த்தைகளை பேசியும், அவர்களை தொட்டு சில்மிஷம் செய்தும், பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக வந்த புகாரால் அவரை, கிராம மக்கள் பலமுறை கண்டித்துள்ளோம்.
இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடமும் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே பள்ளி ஆசிரியை புவனேஸ்வரி பாலியல் தொல்லை தாங்கமுடியாமல் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கு தலைமை ஆசிரியரே காரணம். இவர் பணிபுரிந்த பல இடங்களில் இதேபோல் ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. எனவே மதிவாணனை கைது செய்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில், ‘’சம்பவம் தொடர்பாக விசாரித்து மதிவாணன் மீது உடனடியாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இதுபற்றி கணேஷ்நகர் போலீசார், தலைமையாசிரியரிடம் விசாரிக்க உள்ளதாக தெரிவித்தனர்.காலில் விழுந்து கதறிய கணவர்: ஆசிரியை புவனேஸ்வரி சாவிற்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுக்க புதுக்கோட்டை சிஇஓ அலுவலகம் வந்த புவனேஸ்வரியின் கணவர் வீராசாமி மற்றும் உறவினர்கள் மதிய உணவுக்கு பிறகு அலுவலகத்திற்கு வந்த சிஇஓ அருள்முருகனின் காலில் விழுந்து கதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.