பெரியாறு அணை பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனப்படுத்தும் கேரள அரசு தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதம்
5/8/2025 3:34:27 PM
கூடலூர்: உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த கேரள நீர்வளத்துறை மறுப்பது குறித்து துணைக்குழு கூட்டத்தில் கேரள அதிகாரிகளிடம், தமிழக பிரதிநிதிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கடந்த ஆண்டு மே 7ம் தேதி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க, மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. இக்கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெரியாறு அணைக்கு மின்சாரம், வல்லக்கடவு பாதை சீரமைப்பு, பேபி அணை சீரமைப்பு போன்ற பணிகளை செய்வதென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்குழுவிற்கு உதவியாக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் தலைமையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் தமிழகத்தின் சார்பில் பெரியாறு அணை செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், கேரள பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிக்கேஷன் செயற்பொறியாளார் ஜார்ஜ் டேனியல் மற்றும் உதவிப்பொறியாளர் எஸ்.என். பிரசீத் உள்ளனர்.கடந்த 3 மாதங்களுக்குப்பின் துணைக்குழுவினர் நேற்று பெரியாறு அணையை பார்வையிட்டு அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, கசிவுநீர் போன்றவற்றை பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்த மாலையில் குமுளியில் உள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்,
வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்குச் செல்லும் பாதை சீரமைப்பு. பேபி அணையை ரூ.20 கோடி செலவில் பலப்படுத்துவது. பேபி அணையைச்சுற்றி இருக்கும் 23 மரங்களை வெட்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழக பொதுப்பணித்துறை ஆன்லைனில் அனுமதி கேட்பது. தேக்கடியில் உள்ள தமிழக ஆய்வு மாளிகையில் பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்க அனுமதி கேட்டு கேரள வனத்துறை மறுத்தது.தமிழக பொதுப்பணித்துறையினரின் புதிய படகை இயக்க கேரள வனத்துறை அனுமதி மறுப்பது போன்றவைகள் குறித்து பேசப்பட்டது,இதில் வல்லக்கடவிலிருந்து பெரியாறு அணைக்கு செல்லும் பாதையை முழுமையாக சீரமைக்க அனுமதிக்க முடியாது என கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கண்காணிப்பு குழுவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மறுக்கும் கேரள அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து குழுத்தலைவர் அம்பர்ஜி ஹாரிஷ்கிரீஷ் மேற்கண்ட ஆலோசனைகள் குறித்தும், ஆய்வுகள் குறித்தும் கண்காணிப்பு குழுவிடம் தெரிவித்து அவர்கள் மூலம் முடிவு செய்யப்படும் என்றார்.