ரயிலில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீஸ் தீவிர விசாரணை
5/8/2025 3:30:26 PM
திருமயம்: ராமநாதபுரம் தெற்கு முனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த நாகலட்சுமி(65) சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு திருச்சி, புதுக்கோட்டை வழியாக செல்லும் ராமநாதபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். அதே பெட்டியில் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னை முடுச்சூரைச் சேர்ந்த ரேவதி(28) என்பவரும் பயணித்தார். இருவரும் அசதியில் தூங்கிவிட்டனர்.நள்ளிரவு 12.30 மணி அளவில் திருமயம் ரயில்நிலையத்துக்கு வந்தடைந்த அந்த ரயில் சிறிதுநேரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், முன்பதிவு பெட்டியில் ஏறி அசந்து தூங்கிக்கொண்டிருந்த நாகலட்சுமி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினையும், ரேவதி அணிந்திருந்த 8 பவுன் செயினையும் பறித்துச் சென்றனர். அப்போது கண்விழித்த இருவரும் இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
அவர்கள் அளித்த தகவலை அடுத்து, திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்பி ஆனி விஜயா, டிஎஸ்பி தனபால் மற்றும் போலீசார் திருமயம் ரயில் நிலையத்துக்கு நேற்று வந்து சோதனையிட்டனர். மேலும் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். .எஸ்.பி கூறுகையில், ‘ரயில்களில் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டு ரயில் பெட்டிகளிலும் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்படும். இதுதொடர்பான கருத்துரு மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து வருகிறது’ என்றார்.