இன்ஸ்பெக்டரிடமிருந்து மனைவியை மீட்டுத்தர வேண்டும் : டிஐஜியிடம் விவசாயி முறையீடு
5/8/2025 3:11:16 PM
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் அம்மன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (36). விவசாயியான இவர் நேற்று சேலம் காவல்துறை துணைத்தலைவர் அலுவலகத்திற்கு தனது உறவினர்களுடன் சென்று மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:என் மனைவியை மிரட்டி, கட்டாயப்படுத்தி என் மாமனார், மாமியார் துணையோடு ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் 2வது திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இதனால், எனது குடும்பமே பெரும் கவலையில் மூழ்கியுள்ளது. எனது குடும்பத்தின் மானமே போய்விட்டது. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனிடமிருந்து எனது மனைவியை மீட்டுத்தர வேண்டும்.மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேலும் பல குடும்பங்களை பிரித்து தன் சொந்த விருப்பத்திற்காக பயன்படுத்திக் கொள்வார். எனவே, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட டிஐஜி புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது புகார் தெரிவித்துள்ள ராமகிருஷ்ணனுக்கும், தேன்மொழி என்பவருக்கும் 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், குடும்பத்தகராறில் தேன்மொழி பிரிந்து சென்றுள்ளார். அப்போது, ராமகிருஷ்ணன் குழந்தையை மறைத்து வைத்ததால், தேன்மொழி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் குழந்தையை தன்வசம் பெற்றுக் கொண்டார்.இதுதொடர்பாக விசாரிப்பதற்காக சென்ற இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தேன்மொழி புகார் தெரிவித்து, கடந்த மாதம் 10 மற்றும் 20ம் தேதிகளில் உயரதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார். உடனே, தேன்மொழியின் பெற்றோரை கைக்குள் போட்டுக்கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்து அவர்களை சரிகட்டியுள்ளார். இதையடுத்து, தேன்மொழி தனது புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டார். பின்னர், தேன்மொழியை ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.