காதலனுடன் பிளஸ் 2 மாணவி தற்கொலை: எஸ்.ஐ. ஆக ஆசைப்பட்டாளே என தந்தை கதறல்
5/8/2025 3:09:59 PM
திருச்சி: திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் பிரகாஷ் மகள் ஹரிணி(17). திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். இவர் திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலத்தை சேர்ந்த முறைமாமன் இன்ஜினியர் பிரசாத்(23)தைக் காதலித்து வந்தார். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் கடந்த 5ம் தேதி முத்தரசநல்லூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது சோகத்தை ஏற்படுத்தியது.நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், மாணவி ஹரிணி 856 மதிப்பெண்கள் (தமிழ் 174, ஆங்கிலம் 140, இயற்பியல் 155, வேதியியல் 136, உயிரியல் 116, கணிதம் 135) பெற்றுள்ளார்.மாணவியின் தந்தை பிரகாஷ் கூறியதாவது:
ஹரிணி விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம், கோப்பைகளை பெற்றுள்ளார். எஸ்ஐ ஆக வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டார். நானும், எனது மனைவியும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். வசதி குறைவு. இதனால்தான், காதலன் வீட்டில் எதிர்த்தனர். நாங்களும் அதை விரும்பவில்லை. உயிருடன் இருந்திருந்தால், நல்ல நிலைமைக்கு வந்திருப்பாள். அதற்குள் இறந்துவிட்டாள் என்று கூறி கதறியழுதார்.