தேசிய விருது பெற்ற படம் திரையிட எதிர்ப்பு
5/8/2025 3:05:00 PM
கடந்த ஆண்டின் சிறந்த படத்துக்கான தேசிய விருது பெற்ற படம் கோர்ட் (மராத்தி). சைதன்யா தம்ஹன் இயக்கி உள்ளார். சமீபத்தில் இதை பெங்களூரில் திரையிட திட்டமிடப்பட்டது. ஆனால் சிலர் தியேட்டர்காரர்களை அணுகி படத்தை திரையிடக்கூடாது என்று மிரட்டல் விடுத்ததையடுத்து ரிலீஸ் நிறுத்தப்பட்டது. இதையறிந்த இயக்குனர் சைதன்யா அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’பெங்களூரில் இப்படம் திரையிடாமல் தடுக்கப்பட்டதற்கு படத்தின் கதை காரணம் அல்ல. மராத்தி படங்கள் அங்கு திரையிடப்படுவதில்லை என்பதுதான் காரணம் என கூறப்பட்டது. என் படம் மராத்தி மட்டுமல்ல இந்தி, இங்கிலிஷ், குஜராத் மொழியிலும் உருவாகி உள்ளது. ஆனால் தணிக்கை சான்றிதழ் மராத்தி படம் என்று வழங்கப்பட்டிருக்கிறது. அதுதான் இதற்கு காரணமாக உள்ளது. தியேட்டர்காரர்கள் யாரும் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை. தணிக்கை சான்றிதழ் பெற்ற படங்களாக இருந்தாலும் பிரச்னை உள்ள படமென்றால் அதை ரிலீஸ் செய்ய மறுக்கிறார்கள். கலைக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. அதை எல்லோரும் மதிக்க வேண்டும். பெங்களூர் மக்கள் இப்படத்தை பார்க்க இயலாதது எனக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்றார்.