திருவள்ளூர் மாவட்டத்தில் 3 இடம் பிடித்த மாணவிகள் : ஆவடி, அம்பத்தூர் பள்ளி சாதனை
5/8/2025 3:00:44 PM
ஆவடி: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் ஆவடி அருகே திருமுல்லைவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி மாணவி அனுசுயா 2-வது இடம் பிடித்துள்ளார். தமிழ் 195, ஆங்கிலம் 192, பொருளாதாரம் 200, வணிகவியல் 199, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 200 என மொத்தம் 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை கருப்பசாமி, வியாபாரி. தாய் அமுல் குடும்பத் தலைவி.அனுசுயா கூறுகையில், ‘’ சிஏ படிக்க விரும்புகிறேன். தேர்வுக்காக காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன். மாலையில் 6 மணி முதல் இரவு 10 மணி வரை படிப்பேன். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் ஊக்கம்தான் என்னை அதிக மதிப்பெண்களை எடுக்கவைத்தது’ என்றார்.
ஆவடி நகராட்சி முன்னாள் தலைவரும் பள்ளி தாளாளருமான விக்டரி மோகன், முதல்வர் ரவி ஆகியோர் மாணவியை பாராட்டினர்.அம்பத்தூர், சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளி மாணவி சுந்தரவள்ளி தமிழ் 196, ஆங்கிலம் 194, பொருளாதாரம் 198, வணிகவியல் 199, கணக்கு பதிவியல் 200, வணிக கணிதம் 199 என 1186 மதிப்பெண்கள் பெற்று, திருவள்ளூர் மாவட்டத்தில் 2-வது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை சவுந்திரபாண்டியன், தனியார் கம்பெனி மேலாளர். தாய் விமலா குடும்பத் தலைவி.
சுந்தரவள்ளி கூறுகையில், ‘’ சிஏ படிக்க விரும்புகிறேன். பள்ளியில் நடைபெற்ற வாரத் தேர்வு, ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உன்னிப்பாக கவனித்து வந்ததால், எனக்கு இந்த வெற்றியைத் தேடி தந்தது’’ என்றார். சுந்தரவள்ளியை பள்ளி தாளாளர் சேது குமணன், முதல்வர் செல்வகுமார் பாராட்டினர்.ஆவடி நசரத் மெட்ரிக் பள்ளி மாணவி பிரியதர்ஷினி தமிழ் 195, ஆங்கிலம் 193, வேதியியல் 200, இயற்பியல் 199, உயிரியல் 200, கணிதம் 198 என மொத்தம் 1185 மதிப்பெண் பெற்று, மாவட்டத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். இவரது தந்தை ஜெயக்குமார் மளிகை கடை நடத்துகிறார். தாய் சாந்தி குடும்ப தலைவி.‘’டாக்டருக்கு படிக்க விரும்புகிறேன். அதிக மதிப்பெண் பெற்றதற்கு, ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்தியதே காரணம். நான் டியூஷனும் படித்தேன்’ என்றார். பள்ளி தாளாளர் சந்திரா டேவிட், முதல்வர் லதா அகியோர் மாணவியை பாராட்டினர்.