20 ஆண்டுகளாக திறக்கப்படாத அயப்பாக்கம் காவல் நிலைய கட்டிடம் சமூகவிரோதிகள் புகலிடம்?
5/6/2025 2:17:09 PM
ஆவடி: சென்னையை அடுத்த ஆவடி அருகே அயப்பாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட காவல் நிலையம் இன்றுவரை திறக்கப்படாமலே உள்ளது. இதனால் அந்த கட்டிடம் பாழடைந்து, தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்கிறது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவடி சரகத்தில் திருமுல்லைவாயல் காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டரும், 9 சப்-இன்ஸ்பெக்டர்களும், 45 காவலர்களும், குற்றப்பிரிவில் ஒரு இன்ஸ்பெக்டரும், 3 சப்-இன்ஸ்பெக்டர்களும், 5 காவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த காவல் நிலைய எல்லையில் சரஸ்வதி நகர், தென்றல் நகர், அம்பேத்கர் நகர், எட்டியம்மன் நகர், திருமுல்லைவாயல் காலனி, எம்.ஜி.ஆர் நகர், வெங்கடாசலம் நகர், வைஷ்ணவி நகர், சோழம்பேடு, சிவசக்தி நகர், ஸ்ரீசக்தி நகர், சோழன் நகர், நாகம்மை நகர், அந்தோணி நகர், இ.எஸ்.ஐ. அண்ணாநகர், திருவள்ளுவர் நகர், எஸ்.எஸ். நகர், யஸ்வந்த் நகர், அண்ணனூர், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பகுதிகள் உள்ளன.இப்பகுதிகளில் நடக்கும் பல்வேறு குற்றங்களை திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர். இங்கு, கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஏராளமான கொலை, கொள்ளை, நிலத்தகராறு, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்த இங்கு போதிய போலீசார் இல்லை.மேலும், திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணிபுரியும் குறைந்தபட்ச போலீசாரும் பல்வேறு பணிகளுக்கு அனுப்பப்படுவதால், குற்ற வழக்குகளை சரிவர விசாரிக்க முடிவதில்லை.
இங்கு நாள்தோறும் சுமார் 30 போலீசாரை கொண்டு தினசரி பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இந்நிலையில், கடந்த 1994-ல் அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய பகுதியில் தனி காவல் நிலையம் அமைக்க புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதை இன்றுவரை திறக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால், கட்டிடத்தின் ஜன்னல், கதவுகளை பல சமூக விரோதிகள் திருடிச் சென்றுவிட்டனர். அத்துடன், அங்கு குடித்து கும்மாளம் போடுகின்றனர்.திருமுல்லைவாயல் காவல் நிலையத்தின் பணிச் சுமையை குறைக்க, இந்த காவல் நிலையத்தை உடனடியாக திறக்கும்படி தமிழக அரசுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
இங்கு காவல் நிலையத்துக்கென தனி கட்டிடம் இருப்பதால், அக்கட்டிடத்தை மீண்டும் மறுசீரமைத்து உடனடியாக அயப்பாக்கம் காவல் நிலையத்தை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால்தான், இப்பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை உடனடியாகத் தடுக்கலாம்.எனவே, அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏற்கெனவே கட்டப்பட்டு உள்ள காவல் நிலையத்தை உடனடியாக திறக்க தமிழக அரசும் காவல்துறை உயர் அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.