ஆவின் நிர்வாகத்தில் நவீன கொள்ளை : பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை
5/4/2025 2:52:26 PM
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கேள்வி கேட்பாரற்ற முறையில், ஜனநாயக நிர்வாக நெறிமுறைகளையே கேவலப்படுத்தும் வகையில், எதை எடுத்தாலும் அதைத் தங்கள் சொந்த வருவாய்க்கும், கப்பம் செலுத்துவதற்கும் வழி என்ன என்பதிலேயே அக்கறை கொண்டு, அதையே சதா சர்வ காலமும் எண்ணி எதிர்பார்த்து, நடந்து வரும் அதிமுக ஆட்சியில், அவர்களுக்குக் கிடைத்த மற்றொரு ‘காமதேனு’வாக பால் கொள்முதல், பால் விற்பனை இருந்து வருகிறது. அந்தத் துறையின் அமைச்சராக இருந்த ஒருவரின் கொள்ளை, அளவுக்கு மீறிப் போனதால், அதை மறைக்க வேறு வழியின்றி அதிமுகவின் தலைமை அந்த அமைச்சரை ‘டிஸ்மிஸ்’ செய்து வீட்டுக்கு அனுப்பியது. அவரும் அத்தோடு தலை தப்பியதே அம்மாவின் புண்ணியம் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடிச் சென்று விட்டார். அதன் பின்னர் அதிமுக பிரமுகர் ஒருவர் அடித்த கொள்ளை
வெளியே தெரிந்து, அனைவருடைய கண்டனத்திற்கும் ஆளானதால் அவரைக் கைது செய்து சிறையிலே அடைத்தார்கள். இருந்தாலும் அவர் எப்படியெல்லாம் பாலில் தண்ணீரைக் கலந்து பஞ்சமா பாதகம் செய்து கொள்ளை அடித்தார் என்ற விவரம் எல்லாம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தக் கொள்ளைகள் குறித்து தொடர்ந்து எதிர்க் கட்சிகள் ஓங்கிக் குரல் கொடுத்தே வந்தன.இந்தப் பால் கொள்முதலில் தற்போது புதிதாக வேறு ஒரு நவீனக் கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இது தவிர அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் விற்பனைக்காகப் பால் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அரசின் ஆவின் நிர்வாகம், பால் கொள்முதலில் ஏற்கனவே செய்து கொண்டிருந்த அளவை விடத் தற்போது சுமார் 15 சதவிகிதம் குறைத்துள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 25.12 லிட்டர் பாலை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்கிறதாம்.
இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை முழுவதுமாக விற்க முடியாமலும், பாதுகாத்திட வழி இல்லாமலும் நட்டத்தை அடைகிறார்கள். ஆவின் நிர்வாகத்தில் இதுபற்றி ரகசியமாக விசாரித்த போது, தற்போதைய கோடை காலத்தில் பாலைச் சேமித்து வைக்க செலவு அதிகமாகும் என்பதால், அதனால் ஏற்படும் நட்டத்தைக் குறைக்க, பால்கொள்முதலைக் குறைக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும், அதன்படி பால் கொள்முதல் செய்வதைக் குறைத்திருப்பதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, பால் உற்பத்தியாளர்கள் சுமார் 4 லட்சம் பேர் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை விற்பனை செய்கின்ற நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தி பெருமளவு அதிகரித்தும், அதனை முழுமையாக விற்பனை செய்ய வேறுவழியின்றி பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க மறுக்கின்ற ஆவின் நிர்வாகம், சில தனியார் பால் விற்பனையாளர்களைத் தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் இணை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு, அவர்களிடமிருந்து லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் விலை கொடுத்து வாங்குகின்றது.
அதன் மூலம் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களும், நிர்வாகத்திலே இருப்பவர்களும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள் என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.பாலின் தரத்தைப் பற்றியும் வேண்டுமென்றே குறை கூறி ஆவின் நிர்வாகம் உண்மையான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலைக் கொள் முதல் செய்ய மறுப்பதைக் கண்டித்து அவர்கள் ஆங்காங்கு போராட்டமும் நடத்தி வருகிறார்கள். ஆவின் நிர்வாகம் பாலை வாங்க மறுப்பதால், உற்பத்தியாளர்கள் அதனைக் குறைந்த விலைக்கு சில தனியார்களிடம் விற்றுத் தீர வேண்டியகொடுமையான நிலைமை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு குறைந்த விலைக்கு வாங்கும் தனியார்களே, மீண்டும் ஆவின் நிர்வாகத்திற்கே இரு தரப்பினரும் செய்து கொண்டிருக்கும் மறைமுக ஒப்பந்தத்தின்படி கூடுதல் விலைக்கு விற்றுக்கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆவின் நிர்வாகத்தின் இத்தகைய அட்டூழியச் செயல்களைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன அறிக்கைகள் வந்துள்ளன.
எனவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறுகின்ற இந்த அரசு, மற்றப் பிரச்சினைகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கி வைப்பதைப் போல பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையையும் அலட்சியமாக கருதாமல் உடனடியாகத் தலையிட்டு பால் உற்பத்தியாளர்களின் அவலத்தை அகற்றுவதற்கு உதவிக் கரம் நீட்டத் தவறுமேயானால், அதனைக் கண்டித்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயம் கிடைத்திடவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பால் கொள்ளை போகும் கொடுமையைத் தடுத்திடவும் திமுக தமிழக அளவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை இந்த ஆட்சியினருக்கு முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.