நாகா தீவிரவாதிகள் அட்டூழியம் : துணை ராணுவத்தினர் 8 பேர் சுட்டு கொலை: அசாமில் பரபரப்பு
5/4/2025 2:10:47 PM
கவுகாத்தி: அசாமில் நாகா தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் 8 துணை ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அசாமில் உள்ள சங்லான்சு என்ற இடத்தில் நேற்று பிற்பகலில் அசாம் ரைபிள்ஸ் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதி நாகா தீவிரவாதிகள் செல்வாக்கு மிக்க பகுதியாகும். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அசாம் ரைபிள் படையினர் உள்ளிட்ட துணை ராணுவ படையினர் இங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். இந்த சூழலில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர்கள் மீது நாகா தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த வீரர்கள் திருப்பி பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான். பின்னர் நாகா தீவிரவாதிகள் தப்பி சென்றனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் 6 வீரர்கள் மருத்துவமனையில் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள் மாயமானதாக தெரிகிறது. அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 15 ஆண்டுகளாக இப்பகுதியில் மத்திய அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று அப்பகுதியில் மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 2ம் தேதி நடைபெற்ற இதே போன்ற தாக்குதல் சம்பவத்தில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் அசாமில் பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.