நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமர் மோடி பயணத்தை விமர்சனம் செய்வதா : அருண் ஜெட்லி
5/1/2025 2:50:05 PM
புதுடெல்லி: பிரதமர் பயணத்தை ராகுல் விமர்சனம் செய்வதா என்று அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடி கடந்த மாதம் பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பேசுகையில், கடந்த ஆட்சியில் இந்தியாவை ஊழல் நாடாக ஆக்கிவிட்டனர். நாங்கள் அதை சுத்தம் செய்து வருகிறோம் என்று பேசினார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சூழலில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் விவசாயிகளுக்கு எதிரான போக்கை கொண்டுள்ளதாக அதை கண்டித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கடந்த சில நாட்களாக பஞ்சாப், அரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அவர் விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அதை நாடாளுமன்றத்தில் பேசி வருகிறார்.
இந்த சூழலில் நேற்று ராகுல் நிருபர்களிடம் பேசுகையில், நாட்டில் விவசாயிகள் நிலைமை படு மோசமாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளார். அவரது பயணத்தின் போது இந்தியாவில் விவசாயிகளையும் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜ தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாடு செல்லும் பிரதமரை ராகுல் விமர்சிப்பதா என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அருண் ஜெட்லி கூறுகையில், தேசத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். ஆனால் ஒரு சிலர் எதற்காக வெளிநாடு செல்கின்றனர், அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதே தெரியாத அளவுக்கு வெளிநாடு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்கள் பிரதமர் மோடியை விமர்சனம் செய்வதா என்று குற்றம் சாட்டியுள்ளார்.