இங்கிலாந்தில் மே 7ல் பொதுத்தேர்தல் பிரதமர் டேவிட் கேமரூன் மீண்டும் வெற்றி பெறுவாரா?
4/30/2015 2:33:24 PM
லண்டன்: இங்கிலாந்தில் வருகிற 7ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பிரசாரம் களைகட்டியுள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சியை சேர்ந்த பிரதமர் டேவிட் கேமரூன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இங்கிலாந்தில் மே மாதம் 7ம் தேதியன்று பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 650 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, சுதந்திர ஜனநாயக கட்சி உள்ளிட்டவை தேர்தல் களத்தில் உள்ளன. இதில், கன்சர்வேடிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.ஆளும் கட்சி சார்பில், பிரதமர் பதவிக்கு தற்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் போட்டியிடுகிறார். தொழிலாளர் கட்சி சார்பில் எட் மிலிபேண்ட், சுதந்திர ஜனநாயக கட்சி சார்பில் நிக் கிளேக் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவிவரும் நிலையில் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.
2வது முறையாக களமிறங்கும் பிரதமர் டேவிட் கேமரூன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். இங்கிலாந்தில் இந்தியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கேமரூன் பிரசாரம் செய்து வருகிறார். இந்தியாவுடனான நட்புறவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளார்.இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை சம பலத்துடன் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இரு கட்சிகளுக்கும் தலா 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சுதந்திர ஜனநாயக கட்சிக்கு 7 சதவீத வாக்குகளும், இங்கிலாந்து சுதந்திரா கட்சிக்கு 11 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.