நேபாள மக்களுக்கு திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதிஉதவி : கருணாநிதி அறிவிப்பு
4/29/2015 3:56:43 PM
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நில நடுக்கம் காரணமாக சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழந்ததோடு, கோடிக் கணக்கான ரூபாய் சொத்துகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகள் தரைமட்டமாகி தங்குவதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி துயர் துடைக்கும் பணியிலே இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என்று அறிவித்திருக்கிறார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் துயர் துடைப்பு நிதிக்காக ஒரு மாத கால ஊதியத்தை அளிக்கப்போவதாகவும் செய்தி வந்துள்ளது. இந்த நிலையில், திமுக சார்பில் இந்த துயர் துடைப்பு நிதிக்கு உதவிட வேண்டுமென்ற அடிப்படையில், திமுக எம்பிக்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை நேபாள மக்களின் துயர் துடைப்பு நிதிக்கு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.