தொடர்கிறது அதிகாரிகள் டார்ச்சர் அவலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சல் அரசு ஊழியர் மாரடைப்பால் பலி
4/29/2015 3:55:49 PM
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மனஉளைச்சல் காரணமாக நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை இளநிலை ஊழியர் மாரடைப்பால் இறந்தார்.சென்னையை அடுத்த செம்பாக்கத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் (54). இவர் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், பல்லாவரத்தில் உள்ள ராஜாஜிநகர் ரேஷன் கடையில் வேலை பார்த்த விற்பனையாளர் ஒருவர் ரூ.27 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறி இளநிலை உதவியாளர் சிக்கந்தர் உள்ளிட்ட 4 பேரை கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். செய்யாத தவறுக்கு தன்னை பணி நீக்கம் செய்துவிட்டார்களே என்று சிக்கந்தர் மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை சிக்கந்தர் மாரடைப்பால் உயிர் இழந்தார்.இதுகுறித்து தமிழ்நாடு நியாய விலை கடை ஊழியர் சங்க பிரதிநிதிகள் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக உயர் அதிகாரிகளின் நடவடிக்கை காரணமாக ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு துறை ஊழியர்கள் மனஉளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் ரேஷன் கடையில் வேலை செய்த இளங்கோ என்ற விற்பனையாளர் கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன், அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக கூறி நங்கநல்லூர் ரேஷன் கடை ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். மேலும், சேலம், திண்டுக்கல் பகுதியில் ஏராளமான ரேஷன் கடை ஊழியர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.
அதிகாரிகளின் ஒருவித கெடுபிடி காரணமாக அனைத்து ரேஷன் கடை ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுகூட, பல்லாவரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றிய சர்வரட்சகன் என்ற விற்பனையாளர் செய்த தவறுக்கு, சம்பந்தமே இல்லாத 4 பேரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். இவர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்தார். இவருக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று கூறி சிக்கந்தரை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். இதனால்தான் அவர் மாரடைப்பால் இறந்துள்ளார்” என்றனர்.