சட்டம் இருந்தாலும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுட உத்தரவிடவில்லை: இலங்கை அமைச்சர் சாமிநாதன் தகவல்
4/29/2015 3:42:15 PM
மீனம்பாக்கம்: இலங்கையின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல்துறை அமைச்சர் சாமிநாதன், இன்று கொழும்பில் இருந்து சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:இலங்கையில் அதிபரிடம் ஒட்டு மொத்தமாக குவிந்துள்ள அதிகாரத்தை குறைத்து, அவரது அதிகார வரம்புக்குள் வராத விஷயங்களில் பாராளுமன்றம் முடிவு எடுப்பதற்குரிய 19வது சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அதிபரை எந்த விதத்திலும் சிறுமைப்படுத்துவது ஆகாது.இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏராளமானோர் இந்தியாவில் அகதிகளாக வந்து தங்கியுள்ளனர். இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 20 ஆண்டு கால அனுபவம். அவர்களை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அழைத்துக் கொள்ள இலங்கை அரசு தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக அவர்கள் அங்கு வந்து வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து முடிக்க வேண்டும். நாங்கள் பொறுப்பேற்று 2, 3 மாதங்கள்தான் ஆகிறது. படிப்படியாக வசதிகளை செய்து முடித்த பின்பு அகதிகள் அனைவரையும் எங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போதே இலங்கை திரும்பும் அகதிகளை வரவேற்று ஏற்றுக் கொள்கிறோம்.
ராணுவத்திடம் உள்ள நிலங்களை கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப பெறுகிறோம். குறிப்பாக யாழ்ப்பாணம் பகுதியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும், திரிகோணமலையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் திரும்ப பெற்றிருக்கிறோம். இவைகளை உரியவர்களுக்கு திருப்பி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். அவைகளும் வந்து விட்டால் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அனைத்து இடங்களும் மீண்டும் அவர்களுக்கு சொந்தமாகி விடும்.தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணங்களில் போர் நடந்தபோது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளை அகற்றும் பணி துரிதமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் கண்ணி வெடிகளை அகற்றி விட்டோம். மீதமுள்ளவை விரைவில் அகற்றி முடிக்கப்படும். அதற்கு பிறகு தமிழர்கள் எந்தவித அச்சமுமின்றி வசிக்கலாம்.
இலங்கையில் பிரதமர் தேர்தல் அடுத்த 2 மாதங்களில் நடக்க இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு 13வது சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்படும். அதற்கு பிறகு ராணுவம், போலீஸ் போன்ற துறைகளில் தமிழர்களுக்கு சம உரிமை, அந்தஸ்து கிடைக்கும். இந்திய மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கு இந்திய அரசுதான் முன் வர வேண்டும். நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். இதில் இந்திய அரசுதான் முழு கவனம் செலுத்தி பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தற்போது சிங்களர்கள், தமிழர்கள் என்ற பேதம் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
கடலில் எல்லை தாண்டி வருபவர்களை சுடலாம் என்று சர்வதேச அளவில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு சட்டம் உள்ளது. அதே நேரத்தில் அவர்கள் எல்லை தாண்டி எங்கள் பகுதிக்குள் வந்தால்கூட பரவாயில்லை. எல்லை தாண்டி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை சுடுவதில் தவறு இல்லை என்றுதான் அந்த சர்வதேச சட்டம் கூறுகிறது. அதற்காக எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் சுடுவோம் என்ற உத்தரவை நாங்கள் பிறப்பிக்கவில்லை. அப்படி ஒரு சட்டம் உள்ளது என்று தான் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.இவ்வாறு அவர் கூறினார்.