கவுண்டி கிரிக்கெட்டில் புஜாராவுக்கு தவறான அவுட் கொடுத்த அம்பயர்களை கேலி செய்த ரசிகர்கள்
4/29/2015 2:38:19 PM
ஹெட்டிங்லே: கவுண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் புஜாராவுக்கு அவுட் கொடுத்த விதத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அம்பயர்களை நோக்கி கூக்குரல் எழுப்பி கிண்டல் செய்தனர்.இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான செத்தேஸ்வர் புஜாரா இங்கிலாந்தைச் சேர்ந்த கவுண்டி கிரிக்கெட் அணியான யார்க்ஷயருக்காக விளையாடி வருகிறார். யார்க்ஷயர்-வார்விஷயர் அணிகள் மோதிய போட்டி ஹெட்டில்லேவில் நேற்று நடந்தது. இதில், புஜாரா அவுட்டான விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.செத்தேஸ்வர் புஜாரா துவக்கம் முதலே நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். 4 பவுண்டரிகளையும் அவர் விளாசினார். 23 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புஜாராவுக்கு வார்விக்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் போய்டு ரான்கின் பந்து வீசினார். பேட்டின் விளிம்பில் பட்டுச் சென்ற பந்தை பீட்டர் மெக்கே பிடித்தார்.
இந்த கேட்ச்சில் சர்சை ஏற்பட்டது. ரீப்ளேவில் பார்க்கும் போது பந்து தரையில் பட்டு எழும்புபோதுதான் பீட்டர் மெக்கே பிடித்தது தெரிய வந்தது. ஆனால், அம்பயர் ஸ்டீவ் காராட், ஸ்கொயர் லெக் அம்பயர் ஜெரிமி லாயிட்சுடன் ஆலோசனை நடத்திவிட்டு, புஜாரா அவுட் என நேரடியாக அறிவித்துவிட்டார். மூன்றாவது அம்பயரிடம் அவர் ஆலோசனை நடத்தவில்லை. இதனால், புஜாரா ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.சர்ச்சைக்குரிய முறையில் புஜாராவுக்கு அவுட் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த யார்க்ஷயர் ரசிகர்கள், வார்விக்ஷயர் வீரர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பினர். ‘இது ஆரோக்கியமான ஆட்டம் கிடையாது’ என்று அவர்களைப் பார்த்து கூறினர். ஆட்டம் முடிந்து அம்பயர்கள் திரும்பும்போதும் அவர்களை நோக்கி கூக்குரல் எழுப்பி அவமதித்தனர். இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அம்பயர்களை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.