சேப்பாக்கத்தில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி
4/29/2015 2:37:53 PM
சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் கம்பீர், பவுலிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் சுனில் நரைன், மோர்னே மோர்கல், போத்தா நீக்கப்பட்டு, பேட் கம்மின்ஸ், பிராட் ஹாக், ேடாஸ்சாட்டி சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. சென்னையின் துவக்க வீரர்களாக பிரண்டன் மெக்குலம்-சுமித் ஜோடி களமிறங்கியது. வழக்கம் போல இருவரும் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினர். கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில், மெக்குலம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை பறக்க விட்டார். உமேஷ் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் சுமித் தன் பங்குக்கு வரிசையாக ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை விளாசினார். ஸ்கோர் 42 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. 19 ரன் எடுத்திருந்த மெக்குலம், பியூஸ் சாவ்லாவின் பந்தில், எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரெய்னா, அதே ஓவரில் சிக்சரை விளாசி ரசிகர்களை குஷிப்படுத்தினார். ஆனால் இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 25 ரன் எடுத்திருந்த சுமித், யூசுப் பதானால் 9வது ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதற்கு அடுத்த ஓவரில் ரெய்னாவின் விக்கெட்டையும் சென்னை இழந்தது. ரெய்னா 17 ரன் எடுத்து, ரஸ்ஸல் பந்தில் கீப்பர் உத்தப்பாவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து கேப்டன் டோனியும், ரஸ்ஸல் பந்தில், உத்தப்பாவால் ஸ்டம்பிங் ஆனார். டோனி 3 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.பின்னர் பிராவோ 5 ரன் மட்டுமே எடுத்து, சாவ்லா பந்தில், சூர்யகுமார் யாதவ்விடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, 88 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை தடுமாறியது. ஆனால் டூ பிளஸ்சிஸ் ஒரு பக்கம் நிலைத்து நின்று நிதானமாக விளையாடி கொண்டிருந்தார். 6வது விக்கெட்டுக்கு டூ பிளஸ்சிஸ்-ஜடேஜா ஜோடி, 36 ரன் சேர்த்தனர். ஜடேஜா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் அஸ்வின் 2 பவுண்டரிகளை விளாசினார். இறுதியில் சென்னை 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. டூ பிளஸ்சிஸ் 29 ரன்னுடனும், அஸ்வின் 9 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
எளிய இலக்கை நோக்கி, கொல்கத்தாவின் இன்னிங்சை கம்பீர்-உத்தப்பா துவக்கினர். முதல் ஓவரை வீசிய ஈஸ்வர் பாண்டே, கம்பீரை டக் அவுட்டாக்கி, கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார். 2வது விக்கெட்டுக்கு உத்தப்பா-மனீஷ் பாண்டே ஜோடி அதிரடியாக விளையாடியது. பாண்டே வீசிய 3வது ஓவரில் உத்தப்பா, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசினார். மொகித் சர்மா வீசிய அடுத்த ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அசத்தினார் உத்தப்பா. இதனால் கொல்கத்தா 5 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. 6வது ஓவரில் அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். 17 பந்துகளில் 39 ரன் எடுத்த உத்தப்பா (6 பவுண்டரி, 1 சிக்சர்), மெக்குலமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் நிதானத்தை கடைபிடித்தார். மறுபக்கம் 15 ரன் எடுத்திருந்த பாண்டேவின் விக்கெட்ைடயும் கைப்பற்றி அசத்தினார் அஸ்வின். சென்னையின் சுழல் கூட்டணியான அஸ்வின், ஜடேஜா, ரெய்னா கனகச்சிதமாக பந்து வீசியதால், கொல்கத்தாவின் ரன் ரேட் அதலபாதாளத்திற்கு சென்றது.
உத்தப்பா அவுட் ஆன 6வது ஓவரில், 10க்கும் மேலாக சென்று கொண்டிருந்த கொல்கத்தாவின் ரன் ரேட், 14வது ஓவரில் 6ஆக சரிந்தது. 26 பந்தில் 16 ரன் எடுத்து நிதானமாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை, மொகித் சர்மா கைப்பற்றினார். 16வது ஓவரில், 13 ரன் எடுத்திருந்த யூசுப்பதானை பிராவோ போல்டு ஆக்கினார். அடுத்த ஓவரில் ரஸ்ஸல் 4 ரன்னில் ரன் ஆவுட் ஆக, 100 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தடுமாறியது. ஆனால் மறுபக்கம் டோஸ்சாட்டி நேர்த்தியாக விளையாடி கொண்டிருந்ததால், போட்டியின் முடிவு மதில் மேல் பூனையாகவே இருந்தது. 18வது ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி, கொல்கத்தாவுக்கு பிராவோ அதிர்ச்சியளித்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் கம்மின்சும், 5வது பந்தில் சாவ்லாவும் ஆட்டமிழந்தனர். இருவருமே ரன் எடுக்காமல் டக் அவுட்டானார்கள். இதனால் போட்டி சென்னையின் பக்கம் திரும்பியது.
நெக்ரா வீசிய 19வது ஓவரில் டோஸ்சாட்டி அடுத்தடுத்து, ஒரு பவுண்டரி, சிக்சரை விளாசினார். ஆனால் அதே ஓவரில், உமேஷ் யாதவை கோல்டன் டக்காக்கினார் நெக்ரா. இதனால் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு, 17 ரன்கள் தேவைப்பட்டது. பிராவோ வீசிய அந்த ஓவரின் முதல் மூன்று பந்துகளில் டோஸ்சாட்டி ரன் எடுக்கவில்லை. 4வது பந்தை சிக்சருக்கும், 5வது பந்து பவுண்டரிக்கும் அனுப்பினார் டோஸ்சாட்டி. கடைசி பந்தில் 7 ரன் தேவைப்பட, டோஸ்சாட்டி அந்த பந்திலும் பவுண்டரியே அடித்தார். இதனால் கொல்கத்தா 9 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் மட்டுமே சேர்த்து, 2 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியடைந்தது. இதன் மூலம் சென்னை புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. பீல்டிங்கில் சூப்பராக 2 கேட்சுகளை பிடித்ததுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய பிராவோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.