டெல்லியில் பொது இடத்தில் குப்பைகளை எரித்தால் ரூ. 5000 அபராதம்: பசுமை தீர்ப்பாயம் அதிரடி
4/29/2015 2:21:27 PM
புதுடெல்லி: டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை எரிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில ஆண்டுகளாக பெருகி வரும் வாகனங்கள் காரணமாக கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் பசுமை தீர்ப்பாயம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக 10 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் ஓட்ட தடைவிதித்து பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த சூழலில் அடுத்த கட்ட நடவடிக்கையாக டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள், வீணாகும் பொருட்கள் போன்றவற்றை தெருக்களில், பொது இடங்களில் எரிக்க பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அவ்வாறு எரிப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக இந்த உத்தரவை டெல்லி மற்றும் சுற்றியுள்ள அரியானா, சண்டிகர் உள்ளிட்ட அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.இதுகுறித்து பசுமை தீர்ப்பாய தலைவர் சுதந்திர குமார் அளித்துள்ள தீர்ப்பில், பொது இடத்தில் குப்பைகளை எரிப்பதால் டெல்லியில் மாசின் அளவு 2.9 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கிறது. இதனால் மக்களுக்கு சுவாச கோளாறுகள், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே இவற்றை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.