மேகதாது அணை விவகாரம் : பிரதமரை நாளை சந்திக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா
4/29/2015 2:16:03 PM
பெங்களூர்: கர்நாடக அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாது மற்றும் ராசிமணலில் அணைகள் கட்ட திட்டமிட்டிருக்கிறது. அணைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த மாதம் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அதேநாளில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி, அணை கட்ட தடை விதிக்க வலியுறுத்தினர். பிறகு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமரை சந்தித்து பேசினார். சென்ற 27ம் தேதி விஜயகாந்த் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.இந்நிலையில் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான காரணத்தை பிரதமர் நரேந்திரமோடியிடம் தெரிவிக்க முதல்வர் சித்தராமையா முடிவு செய்தார். அதன்படி நாளை பகல் 1 மணிக்கு பிரதமரை சந்திக்கிறார். அவருடன் பேரவை, மேலவை எதிர்கட்சி தலைவர்கள் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் செல்கின்றனர். இதற்காக நாளை காலை சித்தராமையா தலைமையில் அனைவரும் டெல்லி செல்கிறார்கள்.