100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் ஓம் நமச்சிவாய கோஷம் விண்ணை முட்ட பல்லாயிரம் மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்
4/29/2015 2:11:06 PM
தஞ்சை: தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கட்டிடக்கலையின் பிரமிப்பாகவும், வரலாற்று சின்னமாகவும் திகழும் தஞ்சை பொியகோயிலை(பிரகதீஸ்வரர் கோயில்) மாமன்னர் ராஜராஜசோழன் கிபி 1004ல் கட்டத்தொடங்கினார். இந்த பணி 1010ல் நிறைவு பெற்றது. ஆரம்ப காலத்தில் கோயில் சித்திரை திருவிழாவின்போது தேரோட்டம் நடந்துள்ளது. பெரியகோயிலுக்கு 5 பெரியதேர்களை மன்னர் இரண்டாம் சரபோஜி வழங்கி உள்ளார்.காலப்போக்கில் இந்த தேர்கள் பழுதுபட்டு போனதால் 100 ஆண்டுகளக்கு முன்னர் தேரோட்டம் நின்றது. தேர் இல்லாதது கோயிலுக்கு ஒரு குறையாக இருந்தது. இதைப் போக்கும் வகையில் ரூ.37 லட்சத்தில் புதிய தேர் செய்யும்பணி 2013 செப்டம்ப ரில் தொடங்கி சில தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.
திருச்சி பெல் நிறுவனத்தில் தேருக்கான இரும்பு சக்கரங்கள் மற்றும் அச்சு செய்யப்பட்டுள்ளது. அச்சு இரண்டும் 2 டன் எடை, சக்கரங்கள் ஒவ்வொன்றும் 1 டன் எடை கொண்டது. தேரின் மொத்த எடை 40 டன் . தேர் பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அதன் வெள்ளோட்டம் கடந்த 20ம் தேதி நடந்தது. இதைதொடர்ந்து தேரின் சிம்மசான மட்டம் பதினாறரை அடிக்குமேல் முப்பத்தி இரண்டரை அடி வரை அலங்கரிக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது.அலங்கரிக்கப்பட்ட நிலையில் தோின் உயரம் 49 அடியாக இருந்தது.சோழ மண்டலத்தின் தலைநகரான தஞ்சையில் இத்தனை பிரமாண்டமான தேரை மக்கள் இதுவரை பார்த்ததில்லை என்பதால் கடந்த சில தினங்களாக மக்கள் குடும்பம் குடும்பமாக தேரைக் கண்டு களித்தனர்.
இன்று காலையில் தேரோட்டம் விமரிசையாக, கோலாகலமாக நடந்தது. இதற்காக அதிகாலை 5 மணிக்கு பெரியகோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்ததும் 5.30 மணிக்கு அலங்க ரிக்கப்பட்ட விநாயகர், அசுர தேவர், வள்ளி, தெய்வானை, முருகர், தியாகராஜர், கமலத்தாம்பாள், நிலோத்தாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறிய தேர்களில் கோயிலில் இருந்து பெரியதேர் நிலை கொண்டிருந்த மேலவீதி தோ்முட்டிக்கு சிவாச்சாரியார்கள் கொண்டு வந்தனர்.தியாகராஜர், கமலாம்பாள் சுவாமிகள் தேர்முட்டி வழியாக தேரில் வைக்கப்பட்டனர்.மற்ற சுவாமிகள் தனித்தனி சிறிய தேர்களில் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் தீபாராதனை செய்தனர்.
அப்போது நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. ஓதுவார்கள் வாழ்த்து பாக்கள் இசைத்தனர். பெண்கள் கோலாட்டம் ஆடியபடி மேலவீதியில் இருந்து புறப்பட்டனர். முளைப்பா ரி எடுத்து வந்த பெண்கள் முன்செல்ல, தேரோட்ட விழா களைகட்டியது.தேரோடும் 4 வீதிகளிலும் மக்கள் வெள்ளமென திரண்டனர். எங்கு பார்த்தாலும் நமச்சிவாய ஒலி கேட்ட வண்ணம் இருந்தது. முதலில் 3 சிறியேதேர்கள் புறப்பட்டது. அதில் விநாயகர், அசுரதேவர், வள்ளிதெய்வானை முருகர் ஆகிய சுவாமிகள் சென்றனர்.காலை 6.35 மணிக்கு பெரியதேர் நடு வீதிக்கு இழுத்து வரப்பட்டது. அப்போது அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், கலெக்டர் சுப்பையன், எஸ்.பி. தர்மராஜன், மேயர் சாவித்ரி கோபால், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா ேபான்ஸ்லே, தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான், வாரிய தலைவர் தங்கமுத்து ஆகியோர் வந்தனர்.
அதைத்தொடர்ந்து சரியாக 6.40 மணிக்குதேரில் இருந்து சிவாச்சா ரியார்கள் பச்சைக்கொடி காட்ட நாதஸ்வரம் மங்கள இசை இசைக்க அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.அதைத்தொடர்ந்து பக்தர்கள் ஓம் நமச்சிவாய கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். ஆண்களும், பெண்களுமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர். பெரிய தேருக்கு பின்னால் நிலோத்தம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளின் தேர்கள் சென்றன.தேரோடும் 4 வீதிகளிலும் பக்தர்கள் நீர்மோர், சித்ரான்னங்கள் அன்னதானமாக வழங்கினர். ஆங்காங்கே தேர் நிறுத்தப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு மெதுவாக சென்றது.
பக்தர்களுக்கு உதவியாக தேரை நகர்த்த புல்டோசர் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இன்று மதியம் தோ் நிலை வந்தடையும்.தேரோட்ட விழாவில் எம்.எல்.ஏக்கள் ரெங்கசாமி, ரெத்தினசாமி, துரைக்கண்ணு, பால்வளத்தலைவர் காந்தி, தொகுதி அதிமுக செயலாளர் துரை.திருஞானம்,மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.தேரோட்ட விழாவையொட்டி இன்று தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. காமராஜர் மார்க்கெட்டுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.