ஜிம்பாப்வே அணி பாக். சுற்றுப்பயணம்
4/28/2015 2:26:57 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக எந்த அணியும் அந்த நாட்டுக்குச் சென்று விளையாட முன்வருவதில்லை. கடைசியாக சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்த அணி வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயமடைந்தனர். இதனால், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாது என வெளிநாட்டு அணிகள் அனைத்தும் தெரிவித்துவிட்டன.இதனால், பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து, நடுநிலை நாடுகளில் பாகிஸ்தானுடன் வெளிநாட்டு அணிகள் விளையாடி வருகின்றன. பெரும்பாலும் இத்தகைய போட்டிகள் வளைகுடா நாடுகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றிருந்தும், அரசியல் காரணங்களால் அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் தவித்து வரும் ஜிம்பாப்வே அணியை தங்களது நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வருமாறு பாகி்ஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தது.
உடனடியாக இந்த அழைப்பை ஜிம்பாப்வே வாரியம் ஏற்றுள்ளது. தங்களது நாட்டு அணிக்கு செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய ஜிம்பாப்வேவில் இருந்து பாதுகாப்பு குழு மே 2 ம் தேதி பாகி்ஸ்தான் வர உள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி மே 15 அல்லது 16ம் தேதி பாகிஸ்தான் வரும் என்று தெரிகிறது. மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான்-ஜிம்பாப்வே அணி மோதும். அனைத்து போட்டிகளையும் லாகூரில் நடத்த பாக். வாரியம் திட்டமிட்டுள்ளது. சுற்றுப்பயணம் மேற்கொள்ள வர ஒப்புக் கொண்ட ஜிம்பாப்வே அணிக்கு, பாகிஸ்தான் 5 கோடி ரூபாய் தர உள்ளது குறிப்பிடத்தக்கது.