கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடுபிடிக்கிறது: ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் வழக்கு மீண்டும் விசாரணை.!
9/23/2021 5:01:06 PM
சேலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி நள்ளிரவு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட்டிற்குள் நுழைந்த கும்பல், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் பங்களாவிற்குள் சென்ற அந்த கும்பல் அங்குள்ள அறைகளை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் மற்றும் இதர ஆவணங்களை கொள்ளை யடித்து சென்றது. இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை ேபாலீசார் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் நடந்த அடுத்த சில நாட்களில், அதாவது ஏப்ரல் 28ம் தேதி இரவு ஆத்தூர் அருகேயுள்ள சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான், தனது மனைவி, மகளுடன் கேரளாவில் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சயான் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். மனைவி, மகள் உயிரிழந்தனர்.
தொடர்ந்து சயான் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 13ம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான். தன்னை மீண்டும் விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து சயானிடம் ஊட்டியில் நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இந்த விசாரணையில் பல்வேறு புதிய தகவல்களை சயான் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனால் ஆரம்பக்கட்டத்தில் இருந்து ஊட்டி போலீசார் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது சகோதரர் விபத்தில் இறந்தது எதிர்பாராமல் நடந்தது அல்ல. திட்டமிட்ட கொலையே என்றார். அதே நேரத்தில் கனகராஜின் மனைவி கலைவாணியும், தனது கணவர் விபத்தில் பலியாகவில்லை, திட்டமிட்டே கொலை செய்து விட்டனர் என்று கூறினார். ஏற்கனவே கனகராஜ் விபத்து வழக்கு, ஆத்தூர் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அங்கு வழக்கும் முடிவுக்கு வந்தது. இதற்கிடையில் கனகராஜின் மனைவி கலைவாணியும், அண்ணன் தனபாலும், டிரைவர் கனகராஜ் சாவில் சந்தேகம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் கொடநாடு வழக்கை விசாரிக்கும் தனிப்படை போலீசார், கனகராஜ் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்காக இன்னும் ஓரிரு நாளில் தனிப்படை போலீசார் சேலம் வந்து கனகராஜின் விபத்து வழக்கை ஆரம்ப நிலையில் இருந்து மீண்டும் விசாரிக்க உள்ளனர். இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி கடந்த 2017, ஜூலை 3ம் தேதி தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமாரின் தந்தை மற்றும் அக்காளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் கைதான சந்தோஷ்சாமி, தீபு, சதீஷன், பிஜின், உதயகுமார், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய் ஆகியோரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று கேரளாவில் இருந்து சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆசீஷ்ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரம் விசாரணை நடந்தது. பல முக்கிய தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் தகவல்களை பெறுவதற்காக 2வது நாளாக இன்றும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.