ஆர்எம்கேவி, நல்லி சில்க்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான 103 ஜவுளி கடைகளில் 2வது நாளாக தொடரும் சோதனை: வரிவருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
9/15/2021 5:13:07 PM
சென்னை: வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து தமிழகத்தில் 103 ஜவுளி கடைகளில் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ஆர்எம்கேவி, நல்லி சில்க்ஸ் உள்ளிட்ட முக்கியமான ஜவுளி கடைகளில் வரிவருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் மொத்த வருவாயில் வணிகவரித்துறை மூலம் 60 சதவீதம் பங்களிப்பை கொண்டிருக்கிறது. இதில், ஜவுளி கடைகள், நகை கடைகள், ஓட்டல், வீட்டு மின் உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மற்றும் உற்பத்தி செய்யும் வணிகர்கள் என மொத்தம் 10.88 லட்சம் பேர் வரி செலுத்துகின்றனர். இவர்கள், ஒவ்வொரு மாதமும் வரவு செலவு மற்றும் பொருட்கள் இருப்பு குறித்த கணக்கு விவரங்களை சமர்பிக்கின்றனர். ஆனால், ஒரு சில நிறுவனங்கள் சமர்பிக்கும் கணக்கு விவரங்களுக்கும், ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், வணிகவரித்துறைக்கு வரும் வரி வருவாயில் பெருமளவு இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வணிகவரித்துறையில் தானாக முன்வந்து வரி செலுத்துவோர் மூலம் ஆண்டுக்கு ரூ.96 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. எல்லோரும் சரியாக வரி செலுத்துகின்றனரா என்றால் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் ஜவுளி கடைகளில் காட்டும் லாபத்திற்கு வரி வருவது இல்லை.
எனவே, அரசின் வருவாயை பெருக்கவும், வரி இழப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மூர்த்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனாலேயே அனைத்து நிறுவனங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டன. முதற்கட்டமாக ஜவுளி கடைகளை சோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டன. அதன்பேரில் நேற்று மாலை முதல் மாநிலங்களில் பல்வேறு கிளைகள் வைத்துள்ள 6 முக்கிய ஜவுளிக்கடைகளில் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 39 இடங்கள், மதுரை, கோவையில் 13 இடங்கள், திருச்சியில் 7 இடங்கள், திருநெல்வேலியில் 15 இடங்கள், வேலூரில் 7 இடங்களில் சேலத்தில் 5 இடங்கள், ஈரோட்டில் 4 என இடங்கள் என மாநிலம் முழுவதும் மொத்தம் 103 இடங்களில் வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, ஜவுளி கடைகளில் இருப்பு விவரங்களும், வணிகவரித்துறையில் தாக்கல் செய்த விவரங்களும் சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், கடைகளின் நேற்றைய வருவாய் எவ்வளவு என்பது தொடர்பாகவும் கணக்கிடப்பட்டன. இதை அடிப்படையாக வைத்து லாப கணக்கையும், அரசுக்கு வரும் ஜிஎஸ்டி வரியை வைத்தும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இதில், ஒரு சில கடைகளில் வரி குறைவாக செலுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அந்த கடைகளில் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து கணக்கு விவரங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது. இந்தநிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடருகிறது. இந்த சோதனையின் போது, வரி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அதன் மதிப்பின் முழு விவரங்கள் தெரியவில்லை. இந்த நிலையில் சோதனை முடிந்த பிறகே வரி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான விவரங்கள் தெரிய வரும் என்று வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.