பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பு: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது: 440 கல்லூரிகள் பங்கேற்பு
9/15/2021 5:04:59 PM
சென்னை: பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் தரவரிசைப்பட்டியல் நேற்று வெளியானதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இதில் 440 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன. மேலும் சிறப்பு பிரிவினரில் கட்- ஆப் மதிப்பெண்களில் முதல் 72 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பி.இ, பி.டெக். உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர மாணவர்கள் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24ம் வரை விண்ணப்பித்தனர். அதன்படி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அரசுப் பள்ளி மாணவர்கள் 22,671 பேரும் விண்ணப்பித்தனர்.
கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நடப்பு கல்வி ஆண்டில் பெரும்பாலான மாணவர்கள் ஒரே கட்-ஆப் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஒரே கட்-ஆப் மதிப்பெண் உள்ளவர்களுக்கு, ரேண்டம் எண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி மாணவர்களுக்கான சம வாயப்பு எண் எனப்படும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 50 உதவி மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த 22,671 அரசுப் பள்ளி மாணவர்கள் உள்பட மொத்தம் 1,74,930 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டிடல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 461 கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், உள் கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இன்மை ஆகிய காரணத்தால் சில கல்லூரிகளின் உரிமைத்தை நீட்டிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மறுத்துவிட்டது. அதன்காரணமாக நடப்பு கல்வி ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில் 440 கல்லூரிகளில் உள்ள 1,51,870 சேர்க்கை இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியான நிலையில் அரசுப் பள்ளியில் படித்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு இணைய வழியில் தொடங்கியது. சிறப்பு பிரிவினரில் கட்- ஆப் மதிப்பெண்களில் முதல் 72 இடங்களை பிடித்த மாணவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள 50 உதவி மையங்களுக்கு அழைக்கப்பட்டு இணைய வழியாக நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்றனர். அவர்கள் இணையவழி மூலம் தங்கள் கல்லூரியை தேர்ந்தெடுத்தனர். சிறப்பு பிரிவனருக்கான கலந்தாய்வு வருகிற 24ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.