113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணாவின் திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: தமிழக அரசு அறிக்கை
9/15/2021 5:02:49 PM
சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதுசம்பந்தமாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பேரறிஞர் அண்ணா எனும் மூன்றெழுத்து மந்திரச் சொல் உச்சரித்திடும் போதினிலெல்லாம் புதிய சக்தியொன்று பிறந்திடும் நம்முயிர் நெஞ்சினிலே என்றெண்ணி வியந்திடுமளவிற்கு தன்னுடைய அறிவால், ஆற்றல் மிகுந்த பேச்சால், அன்பு செறிந்த அரவணைப்பால், தலைமைப் பண்பால் தமிழர்களைத் தலை நிமிரச் செய்தவர். தாய்மொழித் தமிழ் மீது தணியாத தாகத்தினை தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதிகொண்ட பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் தன் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் இன்றும் வாழ்ந்து வருகிறார். பேரறிஞர் அண்ணா ஆட்சிக் காலம் குறுகியதே ஆனாலும், அடித்தள மக்கள் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்களை தந்திட்டவர். ‘சென்னை மாகாணம்’ என்று அழைக்கப்பட்டு வந்த நமது மாநிலத்தை, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச் சட்டம், இந்தியாவிலேயே முதன்முறையாக அரசுப் பேருந்துகள் நாட்டுடமையாக்கம், கல்வியில் தமிழுக்கு முதலிடம், இருமொழிக் கொள்கை ஆகியன சான்றுகளாகும்.
1967ம் ஆண்டு ஏப்ரல் 14ம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் என மாற்றம், தமிழக அரசின் முத்திரையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்மெண்ட் ஆப் மெட்ராஸ் என்ற ஆங்கில வாக்கியம் நீக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு என மாற்றியதோடு, அரசு முத்திரையில் இடம் பெற்றிருந்த சத்யமேவே ஜெயதே என்ற வடமொழி வாக்கியம் நீக்கப்பட்டு வாய்மையே வெல்லும் என அழகுத் தமிழிலும் மதராஸ் கவர்மெண்ட் தமிழ்நாடு அரசு எனவும் செக்ரடேரியட் தலைமைச் செயலகம் எனவும், அசெம்பிளி - சட்டமன்றம் எனவும், ஸ்பீக்கர் பேரவைத் தலைவர் எனவும், மந்திரி - அமைச்சர் எனவும், கனம் - மாண்புமிகு எனவும் பேரறிஞர் அண்ணா அழகுத் தமிழாம் அமுதத் தமிழில் மாற்றம் கண்டது புது வரலாறு. இளைஞர்களின் ஏகோபித்த எழுச்சியினை ஈர்த்திட்ட அவர் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்கிற புதிய மூன்றெழுத்து மந்திரத்தையும் மக்களின் மனங்களிலே விதைத்தவர். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.