தமிழக பொது சுகாதார துறை சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்: எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பதை 5 மணி நேரத்தில் கண்டறிய முடியும்
9/14/2021 5:04:05 PM
சென்னை: தமிழக பொது சுகாதார துறை சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதன்மூலம் எந்த வகையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை 5 மணி நேரத்தில் கண்டறிய முடியும். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பொதுசுகாதாரத் துறையின் சார்பில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், சுகாதாரத் துறையின் கீழ் இருக்கும் இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த ஆய்வகத்தை பொறுத்தவரை மரபணு பகுப்பாய்வு கூடம் இந்திய அளவில் ஒன்றிய அரசின் துணையோடு 23 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. தென்னகத்தை பொறுத்த வரையில் பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்த ஆய்வகங்கள் இருக்கிறது. தமிழகத்தில் பெருந்தொற்று காலத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டு அந்த மாதிரிகளை வைரஸ் தன்மை குறித்து கண்டறிவதற்கு பெங்களூர், ஐதராபாத் ஆகிய இரண்டு ஆய்வகங்களுக்குதான் மாதிரிகள் அனுப்பப்பட்டு வந்தது. அந்த மாதிரிகளுக்கான சோதனை முடிவுகளை பொறுத்த வரை ஒரு மாதத்திற்கு மேலான கால இடைவெளியில் சோதனை முடிவுகள் வந்தது.
அதன் அடிப்படையில்தான் மே, ஜூன் மாதத்தில் வந்த கொரோனா நோய்தொற்றில் டெல்டா வைரஸ் 80% ஆதிக்கம் செலுத்தியது என்பதை கண்டறிய முடிந்தது. அதேபோல் டெல்டா பிளஸ் வைரஸ் இருந்ததும் கண்டறிய முடிந்தது. ஒவ்வொரு முறையும் நம்முடைய மாதிரிகளை அனுப்பும் போது மாத கணக்கில் கால அவகாசமும், மிகுந்த பொருட்செலவும் ஏற்பட்டது. ஒரு மாதிரியை பரிசோதனை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் அளவிலும், போக்குவரத்து செலவோடு சேர்த்து ரூ.5 ஆயிரம் வரை செலவாகும் ஒரு சூழல் இருந்தது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் நாமே தமிழகத்தில் ஒரு ஆய்வகத்தை ஏற்படுத்தலாம் என்று சொல்லி எங்கள் துறையிடம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள சொன்னார்.
நிதிநிலை அறிக்கையில் அதற்கான அறிவிப்பும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்டு ஏற்கனவே மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மையம் ஒன்று மிக சிறப்பாக இயங்கி கொண்டு வருகிறது. அதோடு சேர்த்து, இந்த மரபணு பகுப்பாய்வு கூடம் அமைப்பதற்கு ரூ.4 கோடி செலவாகி இருக்கிறது. இந்த ஆய்வகம் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு இன்று நாட்டு மக்களுக்கு அர்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணியாற்றுவதற்கு 5 தொழில்நுட்பர்களை ஏற்கனவே பெங்களூருக்கு பயிற்சிக்கு அனுப்பி, அந்த பயிற்சி முடித்தவர்கள் தான் இந்த மரபணு பகுப்பாய்வு கூடத்தில் பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள்.
எனவே தமிழகத்தில் எடுக்கக்கூடிய மாதிரிகளை 5 மணி நேரத்திற்குள்ளாகவே, குறைந்த பொருட் செலவில் சோதனை முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த பகுப்பாய்வு கூடம் திறக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மாநில அரசே நேரடியாக இது போன்ற பகுப்பாய்வு கூடத்தை ஏற்படுத்தியதில்லை. முதல்முறை தமிழக அரசு, முதல்வரின் வழிகாட்டுதலின் படி இந்த ஆய்வகம் திறக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.