மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி
7/29/2021 5:12:24 PM
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயிலில் இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம், மாமல்லபுரத்தில் அரசு கல்லூரி துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள திருவிடந்தை கிராமத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான நித்யகல்யாண பெருமாள் கோயிலை இன்று காலை 7 மணியளவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். புதிதாக கட்டப்படும் திருமண மண்டபம், பிரகார மண்டபம், உணவருந்தும் கூடம், கோயில் தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் கோயில் சுமார் 1000 ஆண்டு பழமைவாய்ந்தது. தமிழகத்தில் 1000 ஆண்டுகள் கடந்த கோயில்களில், அந்தந்த திருக்கோயிலுக்கு சொந்தமான தேர்கள், குளங்கள், நந்தவனங்கள், கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இதையடுத்து இன்று நித்யகல்யாண பெருமாள் கோயிலில் உள்ள மண்டபங்கள், தெப்பக்குளம், கழிவறைகள், நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதேபோல் இங்கு கட்டி முடிக்கப்பட்டு உள்ள கழிவறை, கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இக்கோயில் குளத்தை சுற்றி பூத்து குலுங்கும் வகையில் செடிகள் நட்டு, நீர் ஊற்றி பராமரிக்கப்படும். இது, மிகப் பழமையான கோயிலாக உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தில் மிக விரைவில் திருமண மண்டபம் கட்டப்படும். அதேபோல் கோயிலின் உள்பகுதியில் கற்கள் பதிக்காத இடத்தில் செடி,கொடிகள் வளர்த்து பராமரிக்கப்படும். 4 ஏக்கர் நிலத்தில், இக்கோயிலை சுற்றி பூங்கா அமைக்கப்படும். மேலும், மாமல்லபுரத்தில் இருந்து திருவிடந்தை வரையுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் அரசு கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
இந்த ஆய்வில் அமைச்சர்களுடன் முதன்மை செயலாளர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, முன்னாள் திமுக எம்எல்ஏ இதயவர்மன், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.