புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகளுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
7/26/2021 5:30:05 PM
சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 968 எஸ்ஐகள் மற்றும் தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக எஸ்ஐ பணியிடங்களுக்கு 968 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தடய அறிவியல் துறையில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியிடங்களுக்கு 62 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு இவர்களுக்கு் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தலா 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். குற்ற நிகழ்வுகளில் புலன் விசாரணை செய்யவும், குற்றச் செயல்களுக்குத் தண்டனை பெற்றுத் தரும் துறையாக மட்டுமின்றி, குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலைகளை உருவாக்கும் துறையாகவும் காவல்துறை செயல்பட வேண்டும் என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலின் எண்ணமாகும். அந்த உயரிய குறிக்கோள்களை நிறைவேற்ற, காவல் துறையைப் பலப்படுத்தும் வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 968 பேரில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 660 பேரும், ஆயுதப்படைக்கு 225 பேரும், தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு 39 பேரும் பணி அமர்த்தப்படுவார்கள்.
இதில் 281 பெண் எஸ்ஐகளும் அடங்குவர். இவர்கள் தமிழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓர் ஆண்டுகாலம் அடிப்படை பயிற்சி பெறுவார்கள். குற்ற நிகழ்வுகளில் குற்றவாளிகளைக் கண்டறிய சேகரிக்கப்படும் சான்றுப் பொருள்களை அறிவியல் ஆய்வு மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உதவுவதே தடய அறிவியல் துறையின் இளநிலை அறிவியல் அலுவலர்களின் முக்கியப் பணியாகும். இத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 62 இளநிலை அறிவியல் அலுவலர்கள் மாநகரங்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் கூடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி (நிர்வாகம்) எம்.ரவி, தடய அறிவியல் துறை இயக்குநர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.