2 ஊழியர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.12 லட்சம் பணம் யாருடையது: வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது
4/7/2025 5:29:07 PM
சென்னை: வேளச்சேரி தொகுதியில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஊழியர்கள் பைக்கில் கொண்டு ெசன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது. பெட்டியை எடுத்துச் சென்றவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.12 லட்சம் பணம் யாருடையது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மறு வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மாலை 7 மணியுடன் முடிவடைந்தது. பல இடங்களில் வாக்குப்பதிவு மையத்திற்குள் அதிமுகவினர் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதேபோல், வேளச்சேரி தொகுதியில் பல வாக்குசாவடிகளில் அதிமுகவினர் கடைசி நேரத்தில் கள்ள ஓட்டுகள் போட முயன்றனர். அதை காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் முறியடித்தனர். ஆனாலும் பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு இரவு 7.30 மணியளவில் தரமணி நூரடி சாலையில் 3 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடையாளம் தெரியாத 2 நபர்கள் ஸ்கூட்டரில் கொண்டு சென்றனர்.
அப்போது அவ்வழியாக தனியார் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் வந்துள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டரில் எடுத்து செல்வதை பார்த்த அந்த நபர் வழிமறித்துள்ளார்.
ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்ற இரண்டு பேரும் அந்த ஊழியருக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் தங்களது வாகனத்தை விரைவாக ஓட்டிச்சென்றனர். இதனால், உணவு டெலிவிரி ஊழியர் வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்துகிறார்கள் என சத்தமாக கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஸ்கூட்டரில் வாக்குபதிவு இயந்திரத்தை எடுத்து சென்ற 2 பேரையும் பொதுமக்கள் வழிமறித்து பிடித்தனர். வாக்குப்பதிவு இயந்திரத்தை ஸ்கூட்டரில் எடுத்து வந்த 2 பேரிடமும் பொதுமக்கள் இயந்திரத்தை எங்கே எடுத்துச்செல்கிறீர்கள்? நீங்கள் யார் என பொதுமக்கள் கேள்வி கேட்டப்படி தாக்க முயன்றனர். அதற்கு அந்த 2 பேர் நாங்கள் தேர்தல் அலுவலர்கள் என்றும் இயந்திரத்தை தலைமை அலுவலகத்திற்கு எடுத்து செல்கிறோம் என்று கூறினார். அவர்களிடம் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் 2 பேரையும் படித்து சரமாரியாக உதைத்தனர். வாக்குப்பகுதி இயந்திரம் கடத்தப்பட்ட சம்பவத்தை அறிந்த வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் மற்றும் திமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்குள் அவரச அவசரமாக போலீசார் பொதுமக்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை கடத்தி வந்த 2 நபர்கள் மற்றும் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2 பேர் வந்த ஸ்கூட்டரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதைபார்த்த காங்கிரசார் வாக்குப்பதிவு இயந்திரம் கடத்தி வந்த நபர்களை காப்பாறும் நோக்கில் போலீசார் ஈடுபடுவதாக கூறி வேளச்சேரி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பிடிப்பட்ட சம்பவம் அறிந்த வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் காவல் நிலையத்திற்கு வந்து பிடிபட்ட 2 நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், 2 பேரும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.12 லட்சம் பணம் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கொடுக்க கொண்டு வந்ததாக தெரிவித்தனர். மேலும் நூறடி சாலையில் உள்ள இந்திரா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பகுதிவு இயந்திரங்கள் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கு மாற்று இயந்திரமாக பயன்படுத்த இந்த வாக்குப்பகுதி இயந்திரங்கள் என தெரியவந்தது.
ஆனால் தேர்தல் அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தை வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா ஏற்றுக்கொள்ள வில்லை. எந்த வித பாதுகாப்பு இன்றி 3 வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்கூட்டரில் கொண்டு செல்ல காரணம் என்ன? திட்டமிட்டு வாக்கு பதிவு இயந்திரத்தை மாற்றும் நோக்கில் இந்த சதி திட்டம் நடந்துள்ளதா? ஊழியர்களிம் கட்டுக்கட்டாக ரூ.1.12 லட்சம் பணம் யார் கொடுத்தது. இது திட்டமிட்டு வாக்கு பதிவு இயந்திரங்களை மாற்றும் நோக்கில் தான் இந்த சதி செயல் நடந்துள்ளதாக வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேர்தல் அதிகாரிகளிடம் குற்றம்சாட்டினார். எனவே, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும். வாக்குப்பதிவு கொண்டு சென்றதில் அதிமுகவிற்கு முக்கிய பங்கு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட 2 ஊழியர்களின் செல்போன்களை கைப்பற்றி அவர்களிடம் யார் யார் பேசியுள்ளனர் என்பது குறித்து பட்டியல் எடுத்து முழு விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் ேவட்பாளர் அசன் மவுலானா புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் வேளச்சேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மதுரை ெதற்கு தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் புதூர் பூமிநாதன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட காமராஜர்புரம் வாழைத்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன.
அப்போது இயந்திரத்தில் பேட்டரியை கழட்டாமல் ‘சீல்’ வைத்துவிட்டனர். இதற்கு அங்கிருந்த திமுக, மதிமுக ஏஜென்டுகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் தேர்தல் அலுவலர் முறையாக பதில் கூறவில்லை. தகவல் அறிந்து அங்கு வந்த மதிமுக வேட்பாளர் புதூர் பூமிநாதன் தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது வாக்குச்சாவடியில் இருந்த துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் வேட்பாளர் என தெரியாமல் பூமிநாதனை மிரட்டி வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாழைத்தோப்பு பகுதி பொதுமக்கள் வாக்குச்சாவடி முன் திரண்டு முற்றுகையிட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இயந்திரங்களுக்கு சீல் வைப்பதற்கு முன்பே வாக்குபதிவு செய்யும் இடத்தில் பொருத்தப்பட்டிருந்த வெப் கேமராவை கழட்டிவிட்டதாக தெரியவந்தது. இது தவறுதான் என அதிகாரிகளே ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 155(எம்) வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்திட வேண்டும், இந்த வாக்குச்சாவடியில் நடந்த முறைகேடு தொடர்பாக உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெற்கு தொகுதி தேர்தல் அலுவலரிடம் வேட்பாளர் பூமிநாதன் மனு கொடுத்தார்.