பாஜகவினர் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன்: கோவை தெற்கு காங்.வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீர் மறியல்
4/6/2025 5:38:10 PM
கோவை: கோவையில் பாஜகவினர் ஓட்டுக்கு பணம் வழங்க டோக்கன் கொடுப்பதாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், பாஜக வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார். இன்று காலை ராமநாதபுரத்தில் உள்ள பள்ளியில் மயூரா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.
இந்நிலையில், வைசியாள் வீதி பகுதியில் உள்ள வீடுகளில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க டோக்கன் கொடுத்து தாமரைக்கு ஓட்டு போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதையறிந்த காங்கிரசார் டோக்கன் கொடுத்த பாஜகவினரை கையும் களவுமாக பிடித்தனர். தகவலறிந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோர் அங்கு சென்றனர். பணம் வழங்க டோக்கன் கொடுத்து கொண்டிருந்தது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். இது தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது ஆதரவாளர்களுடன் வைசியாள் வீதி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். அப்போது அவர் பாஜகவினர் கொடுத்த டோக்கனை கையில் வைத்திருந்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஓட்டுக்கு பணம் வழங்க பாஜகவினர் டோக்கன் அளித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.