அமித்ஷா உத்தரவு எதிரொலி: பாஜகவிடம் அதிமுக சரண்: தாமரை சின்னத்தில் போட்டியிட டிடிவிக்கு அழுத்தம்
3/2/2025 6:31:12 PM
சென்னை: அமித்ஷா உத்தரவு எதிரொலியாக 30 தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க அதிமுக சம்மதித்துள்ளது. தற்போது, தாங்கள் போட்டியிடும் 30 தொகுதிகளின் பட்டியல்களையும் பாஜ வழங்கியுள்ளது. அதில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை கேட்பதால் அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் தங்களது சின்னத்தில் போட்டியிடும்படி டிடிவியிடம் பாஜ தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் வழக்கம்போல பாமகவுக்கு 23 தொகுதிகளை முன் கூட்டியே வழங்கி, கூட்டணியை உறுதிப்படுத்தியது.
அதோடு தொகுதிக்கான தேர்தல் செலவாக பெரிய தொகை ‘200’ வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் 600 கேட்டதாகவும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது 200ல் முடித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து பாஜகவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியது. பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிஷன்ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது தங்களுக்கு 60 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்.
அதில் 20 தொகுதிகளை நாங்கள் சசிகலாவுக்கு ஒதுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறினர். இதற்கு அதிமுக தலைவர்கள் இருவரும் சம்மதிக்கவில்லை. இருவரும் விடாப்பிடியாக சசிகலாவை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். இந்த தகவல் கடந்த சனிக்கிழமை சென்னை வந்த அமித்ஷாவிடம், பாஜக மேலிட பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்திக்க மறுத்து விட்டார். பின்னர் இருவரும் சேர்ந்து சந்திக்க வேண்டும் என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தியதால், தனது டெல்லி பயணத்தை தள்ளி வைத்து விட்டு அவர்களை ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு சந்தித்தார். அப்போது 3 மணி நேரம் சந்திப்பு நடந்தது.
வழக்கமாக அதிமுக பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது அத்வானி முதல் பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் அவரது வீடான போயஸ்கார்டனில்தான் சந்திப்பார்கள். ஆனால் இப்போது அமித்ஷாவை சந்திக்க தமிழக தலைவர்கள் இருவரும் காத்திருந்தனர். பின்னர் அமித்ஷாவுடனான பேச்சில் சசிகலாவை சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மறுத்து விட்டனர். சசிகலாவை சேர்த்தால் ஒரு குறிப்பிட்ட சாதி கட்சியாக மாறிவிடும். அதனால் அவர்களை சேர்க்க முடியாது என்று கூறிவிட்டனர். அதற்கு பதில் நீங்கள் எவ்வளவு தொகுதிகள் வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம்.
21 சீட் தருவதாக சொன்னோம். இப்போது 30 சீட் தருகிறோம். உங்கள் சின்னத்தில் அமமுக வேட்பாளர்களை நிற்க வையுங்கள் என்றனர். இதனால் கடைசியில் 30 சீட்டுக்கு அமித்ஷா சம்மதம் தெரிவித்தார். அதன்பின்னர், நாங்கள் கேட்கும் தொகுதிகளின் பட்டியல்களை தருகிறோம். அந்த தொகுதிகளை ஒதுக்குங்கள் என்று கூறிவிட்டார். இதற்கு அதிமுக தலைவர்களும் சம்மதித்தனர். நள்ளிரவில்தான் பேச்சுவார்த்தை முடிந்தது. அதைத் தொடர்ந்து 30 சீட்டுகளை பெற்ற பாஜக தலைவர் அமித்ஷாவை டிடிவி தினகரன் ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. அப்போது அமமுகவுக்கு தாங்கள் 10 சீட் தருகிறோம்.
அவர்கள் பாஜக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் டிடிவி தினகரன் இதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் அவர் புறப்பட்டுச் சென்று விட்டார். ஆனால் அப்போது பாஜக போட்டியிடும் இடங்களில் அமமுக போட்டியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் டிடிவி தினகரன் முடிவை தெரிவிக்காமல் சசிகலாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்று கூறிச் சென்றார். இதற்கிடையில் 30 தொகுதிகளுக்கான பட்டியலை அதிமுக தலைவர்களிடம் தமிழக பாஜக தலைவர்கள் நேற்று நட்சத்திர ஓட்டலில் நடந்த பேச்சுவார்த்தையின்போது வழங்கினர். அதில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 5 சீட், வடமாவட்டங்களில் 5, கொங்கு மண்டலத்தில் 5, தென் தமிழகத்தில் 15 சீட் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிக சீட் கேட்டு வருகின்றனர். இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் பெரும்பாலும் அதிமுக எம்எல்ஏக்கள் உள்ள தொகுதிகளை கேட்டு வருகின்றனர். இதனால் அதில் ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுக்க விருப்பம் தெரிவித்த தலைவர்கள் பெரும்பாலான தொகுதிகளை தங்களுக்கே வழங்கும்படி கேட்டு வருகின்றனர். இப்போது அதிமுக சீட் ஒதுக்குவதற்கு பதில் பாஜகவிடம் கேட்டு பெறும் நிலை தற்போது உள்ளதால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. இன்று அல்லது நாளைக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையை இறுதி செய்வதற்காக பாஜக தலைவர்கள் கிஷன்ரெட்டி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர் இன்று காலை சென்னை வந்துள்ளனர். அவர்கள் பாஜக தலைவர்களிடம் பேசிய பின்னர் அதிமுக தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தையை இறுதி செய்கின்றனர்.