பாளை கல்லூரியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி அகிம்சை முறையில் நரேந்திர மோடியை நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும்: ராகுல்காந்தி பேச்சு
2/28/2021 5:31:48 PM
நெல்லை: அகிம்சை முறையில் மோடியை ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூருக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பாளை சேவியர் கல்லூரியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தென்மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல், 2வது நாளான இன்று காலை முதல் நிகழ்ச்சியாக பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், ஆசிரியையகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடங்கினார். ஒவ்வொருவரும் புதிய கல்விக் கொள்கையின் பாதிப்பு, மாநில அரசின் கல்வி பணி தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து வினாக்கள் எழுப்பினர். அதற்கு அவர்கள் அருகே சென்று ராகுல் பொறுமையாக பதிலளித்தார்.
தொடர்ந்து ராகுல் பேசுகையில், ‘‘புதிய கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் மத்திய அரசு முறையான கருத்துக்களை கேட்டு அமல்படுத்தவில்லை. மேலும் இந்தக் கல்விக் கொள்கையில் பல அம்சங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரை வெற்றி நடை போடும் தமிழகம் என பிரசாரம் செய்கின்றனர். வெற்றி நடை போடுகிறது என்று கூறுகிறவர்களிடம் யாருக்காக என்று நீங்கள் கேள்வி கேளுங்கள். தமிழக மக்களுக்கான வெற்றி நடை போடவில்லை. 2 அல்லது 3 பேருக்கு மட்டுமே வெற்றி நடை போடுகிறது. கல்வியை பொறுத்தவரை மதசார்பின்மையுடன் கருத்துக்களை கேட்டு அமல்படுத்துவது அவசியம். அதாவது ஆசிரியர்களுக்கு சுதந்திரம் முக்கியம். அப்போது தான் அவர்களது சிந்தனைத் திறனை வளர்த்து சிறந்த கல்வியை போதிக்க முடியும். இது மாணவர்களுக்கும் பொருந்தும். மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கவும், கேள்வி கேட்க அனுமதிப்பதும் அவசியம்.
70 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கத்தியின்றி, ரத்தமின்றி நாம் அகிம்சை முறையில் போராடி நாம் அவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினோம். அதே போல் நரேந்திர மோடியை அகிம்சை முறையில் ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூருக்கு திருப்பி அனுப்பவேண்டும்.
கல்வியை வியாபாரமாக்கக் கூடாது. முக்கியமாக தரமான கல்வி அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று சேர வேண்டும். இந்தியாவில் வேளாண்மை, கல்வி, சுகாதாரம் ஆகியவை வணிகமயமாகிவிட்டது. வணிகம் கல்வியை ஆளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமி, மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாநில செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாநில பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.